அதிமுக-பாஜக கூட்டணியை உடைத்தது அண்ணாமலை தான்...எஸ்.பி.வேலுமணி காட்டம்

Aadmika
Jun 06, 2024,05:33 PM IST

சென்னை : லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்படாமல் போனதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.


லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்துள்ளது. இதில் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுக அடைந்து படுதோல்வி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படாமல் போனதற்கும், ஏற்கனவே இருந்த கூட்டணி முறிந்ததற்கும் அண்ணாமலை தான் காரணம்.




லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால் 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். தேவையில்லாமல் பேசி அண்ணாமலை தான் அதை கெடுத்து விட்டார். அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதை நிறுத்தி விட்டு, கோவை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் கொஞ்சமாவது நிறைவேற்ற முயற்சி செய்யட்டும். 2019ம் ஆண்டை விட அதிமுக கூடுதல் ஓட்டுக்களையே பெற்றுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணனை விட அண்ணாமலை குறைவாக ஓட்டுக்களையே பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது, வெளியேறியது தான் என தெரிவித்துள்ளார்.


பாஜக-அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் அதிமுக.,விற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என தொண்டர்களும், பொது மக்களும் கருத்து கூறி வந்த நிலையில் தற்போது அதை குற்றச்சாட்டாக அதிமுக முன்னாள் அமைச்சரே முன் வைத்திருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.