தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறியதா..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

Manjula Devi
Mar 04, 2025,05:52 PM IST

சேலம்: தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறிவரும் நிலையில், தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக கூறியதா என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.


தேமுதிகவின் செயற்குழு கூட்டத்தில் 14 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் யார் ஒதுக்குகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம் என கடந்த தேர்தலின் போது கூறி வந்தார் பிரமலதா விஜயகாந்த். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை  மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதன் பிறகு இறுதியாக அதிமுக 4 தொகுதிகள் ஒதுக்குவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டது. அப்போதிலிருந்து தேமுதிகவிற்கு அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொது செயலாளர்  பிரேமலதா தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி வந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி.


இதுகுறித்து இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 


இன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகம்,பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கடந்த எட்டு வருடங்களாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் விமர்சிக்கிறீர்கள். திமுகவுடைய தாரக மந்திரமே கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன். திமுகவில் இவ்வளவு அக்கிரமம் நடக்கிறது. அநியாயம் நடக்கிறது. இதையெல்லாம் ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வர மாட்டேங்கிறீர்கள். 




திமுக தான் எங்களின் ஒரே எதிரி:


அண்ணா திமுக, திமுகவை வீழ்த்துவதற்கு தயாராக இருக்கிறது. ஒரே எதிரி எங்களுக்கு திமுக மட்டும் தான். வேறு கட்சியும்  எங்களுக்கு எதிரி கிடையாது. திமுகவை வீழ்த்த வேண்டும் அதுதான் எங்களின்  குறிக்கோள்.வாக்குகள் சிதறாமல் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் தலையாய கடமை . அதுதான் வருகின்ற 2026 தேர்தலில் நடக்கும்.


பாஜகவுடன்  கூட்டணியா என்ற கேள்விக்கு, கூட்டணிக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆறு மாதம் கழித்து கேளுங்கள். எல்லாம் யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி இதற்கு என்ன பதில் அளிக்கப்படும். யார் யாருடன் எப்போது இணைவார்கள் என்பது பிறகு தெரியவரும். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது 


தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக அதிமுக கூறியதா..? நாங்கள் ராஜ்ய சபா சீட் ஒதுக்குவதாக எந்த இடத்திலும் கூறவில்லை. நாங்கள் சொன்னோமா. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ராஜ்யசபா சீட் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது என்ன வெளியிட்டோம் என்று எடுத்துப் பாருங்கள் என கூறியுள்ளார்.