வெற்று அறிவிப்பு... விளம்பரத்திற்காக மட்டுமே போடப்பட்ட பட்ஜெட்: எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
Mar 14, 2025,05:26 PM IST

சென்னை: திமுக வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், கடன் எவ்வளவு இருக்கு தெரியுமா?. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் கடன் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடன் வாங்கிதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூடிய நிலை இன்று உள்ளது. கடன் வாங்காமல் வருவாயை பெருக்கி அதன் மூலம் வளர்ச்சி இருந்தால் சரி. அதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த கடனை யார் கட்டுவது.


திமுகவின் பல்வேறு வாக்குறுதிகள் எதவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது?. நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படுவது சாத்தியமா? கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.