எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு

Meenakshi
Jan 16, 2025,04:28 PM IST

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதி ஏற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:


தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வந்த மங்கா புகழ்பெற்ற மாமணி,  எத்தனை எத்தனை தலைமுறைகள் தவம் செய்து பெற்றார்களோ என்று வியந்து பார்க்கும் வண்ணம் நமக்குக் கிடைத்திட்ட தெய்வப் பிறவி, ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்த வள்ளல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், கோடான கோடி எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும், அனைத்து தமிழர்களுக்கும், எனது மகிழ்ச்சி கலந்து நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.


எம்ஜிஆர் தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட மனிதர்




உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், நம்முடைய அன்புத் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் என்பது ஒரு மகிழ்ச்சியும் உணர்வு பூர்வமான அனுபவங்களையும், தாய்மை பாசத்தையும், கருணையையும், மனித நேயத்தையும், மானுட பற்றியும் மலரச் செய்யும் பொன்னான நாள். "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.. புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.. என்று தான் பதில் வரும். அந்த அளவிற்கு எம்ஜிஆர் தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட மனிதராக, திரைத்துறையில் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக, அரசு நிர்வாகத்தில் ஆட்சி செய்யும் நல் இதயம் படைத்த தீரமும், வீரமும் கொண்டு நிர்வாக ஆற்றல் படைத்த தலைவராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றி வாகை சூடும் சாதனையாளராக, இதுவரை போல் இன்னொருவர் பிறக்க முடியாது என்று அவருடைய எதிரிகளும் தங்கள் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சரித்திர நாயகனாக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.


எம்ஜிஆருடைய ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களை திட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளை பூர்த்தி செய்வது தான் அரசாங்கத்தின் உடைய முதல் கடமை என்று உணர்கின்ற திட்டங்களாகவும் அமைந்தன.


எம்ஜிஆருக்கு முன் எம்ஜிஆருக்கு பின் 


எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உட்பட ஏழை எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள் தான் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கிறது. இனி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். இது போன்ற திட்டங்களைத் தான் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு, வரலாற்றையே எம்ஜிஆருக்கு முன் எம்ஜிஆருக்கு பின் என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்குரியவர் எம்ஜிஆர் அவர்கள். அவர் விட்டுச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய அரசியல் முறையும் தான் நமக்கெல்லாம் முன் மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.


எம்ஜிஆரை தொடர்ந்து, ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதாவின் நல்ல ஆசையோடு செயல்பட்ட எனது தலைமையிலான ஆட்சியிலும், மக்கள் நலன் சார்ந்த நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம், ஏராளம். எம்ஜிஆர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழ் சமூகத்தில் என்னவெல்லாம் தொண்டாற்றி இருப்பாரோ, அவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காக தான், ஜெயலலிதாவுக்கு பிறகு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகிறது.


அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வோம்


தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்ஜிஆரின், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சி பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதி ஏற்போம்.


ஜனநாயகத்தை சீர்குலைக்க நாம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்குகின்ற கடமையும் , பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன்.நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம். வெற்றிவாகை சூடுவோம் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்