அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் மே இரண்டாம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை மையமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இதற்காக வரும் மே இரண்டாம் தேதி அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து விளக்கம் அளித்து, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கொள்ள, தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் பல்வேறு அறிவுத்தல்களை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மே இரண்டாம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டம் குறித்த அறிக்கையை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது,
அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார் .