2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Manjula Devi
Mar 04, 2025,05:52 PM IST

சென்னை: 2026 இல்  தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார். தொண்டர்களை திருப்தி படுத்தவே இவ்வாறு பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


கடந்த வாரம் புதன்கிழமை தவெகவின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது . அப்போது விஜய் பிரசாந்த் கிஷோரையும் அவருடன் மேடை ஏற்றி திமுக பாஜகவை தாக்கி  பேசியிருந்தார். தவெக தலைவர் விஜய் பேசியதில் அதிமுகவை விமர்சிக்கவில்லை. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து விஜய்க்கு ஆலோசனை வழங்கும் தேர்தல் வியூக ஆலோசகராக செயல்பட்டு வரும் பிரசாந்த் கிஷோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்தப் போட்டியிடுவார். நிச்சயம் கூட்டணி அமைக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.




இந்த நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,


விஜய் தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பாக பேசுவது அவருடைய கருத்தை சொல்கிறார். இது கட்சியின் கருத்தாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தான் ஒட்டுமொத்த எஜமானர்கள். திமுகவுக்கு மாற்று அண்ணா திமுக தான்.  பொதுச்செயலாளர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால் பிரதான எதிர்க்கட்சி அண்ணா திமுக தான். 


பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்கள் முழுமையான ஆதரவு எங்களுக்கு அளிப்பதன் மூலம் மீண்டும் அம்மாவின் அரசு பொதுச் செயலாளர் தலைமையில் மலரும். இது பொதுவாக 2026 இல் நடைபெறப் போவது ஒன்று. புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் அவர்களை பொறுத்தவரை அவர்கள் கட்சி தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக, சந்தோசப்படுத்துவதற்காக ,ஏதாவது ஒரு கருத்துக்களை கூறலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை.


நீங்கள் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்க முடியுமா..? அவர் அவருடைய கட்சிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் அப்படித்தான் சொல்ல முடியும். 2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்.எம்ஜிஆர் உடன் யாரையும் ஒப்பிட முடியாது. விஜய் எம்ஜிஆர் ஆக முடியாது.


இதன் நிதர்சனமான உண்மை என்னவென்றால் திமுக 3 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் சட்டமன்ற தேர்தலில் வென்றது. 

தற்போது 25 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வாக்குகள் எல்லாம் அண்ணா திமுகவிற்கு தான் வரும் என கூறியுள்ளார்.