"கொடி போச்சே".. ஓ. பன்னீர் செல்வம் காரிலிருந்து கழற்றிட்டாங்க.. இனி எதைக் கட்டுவாரோ!

Meenakshi
Nov 09, 2023,04:41 PM IST
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுக மீதான பிடிப்புகளை ஒவ்வொன்றாக இழந்து வந்த  முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், இப்போது தனது காரில் இருந்த அதிமுக கொடியையும் இழந்திருக்கிறார்.

கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து தற்போது தனது காரிலிருந்து அதிமுக கொடியை அவர் கழற்றி விட்டார்.

ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் மிக முக்கியமான நபராக வலம் வந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் வலது கரம் போல திகழந்தவர். ஆனால் தற்போது அதிமுகவில் தடமே இல்லாமல் போய் விட்டார். அவருக்கு இருந்த அதிமுகவின் எல்லா அடையாளங்களும் பறிக்கப்பட்டு விட்டது. 

ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவருக்கு, ஜெயலலிதாவால் அடுத்த வாரிசு என அடையாளம் காட்டப்பட்டவருக்கு இந்த நிலையா என்று அவரது ஆதரவு தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் சிறிது காலம் பிரிந்து அரசியல் செய்தனர். பின்னர் சசிகலா வெளியேற்றத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்தனர். 



இந்த நிலையில், இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பூசலால் இருவரும் பிரிந்தனர். பிரிந்த பின்னர் அதிமுக எனக்கு என்று ஓபிஎஸ்சும், இல்லை அதிமுக எனக்கு தான் என்று இபிஎஸ்சும் மாறி மாறி கூறி வந்த நிலையில், பல கட்ட போராட்டத்திற்கு பின்னர்  ஒரு கட்டத்தில் அதிமுக இபிஎஸ்சின் வசம் வந்தது.  

தற்போது  எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவின் கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம்  வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். 

இந்நிலையில் அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது தனது காரில் இருந்த அதிமுக கொடியை கழற்றி விட்டார் ஓ.பி.எஸ். இனி என்ன கொடியை ஓபிஎஸ் பயன்படுத்துவார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக ஜெயலலிதாவின் உருவத்தை பொறித்து புதிதாக ஏதாவது கொடியை அவர் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. இதை வைத்து தொண்டர்களின் அனுதாபத்தையும் அவர் சம்பாதிக்க முயலலாம்.