அதிமுக பாஜக கிடுக்கிப்பிடியில் சிக்கி கிடக்கிறது:  கே.எஸ்.அழகிரி  தாக்கு

Meenakshi
Sep 25, 2023,04:50 PM IST

சென்னை: அதிமுக பாஜகவின் கிடுக்கிப் பிடியில் சிக்கி கிடக்கிறது. பாஜக அதிமுக இருகட்சிகளும் பிரியாது. தனித்து தேர்தலை சந்திக்கும் தைரியம் அவர்களுக்குக் கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். 


அதிமுக -பாஜகவுக்கு இடையே நடக்கும் கூட்டணி மோதல் தற்பொழுது தீயாக எறிந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பிலுமே எரியும் தீயில் எண்ணெய் உற்றுவது போல ஆளாளுக்கு கருத்து கூறி தீயை வளர்த்து வருகின்றனர். 




இந்த கலாட்டாவை திமுக கூட்டணிக் கட்சிகள் ஜாலியாக வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டுள்ளன. 

இந்நிலையில், பாஜக அதிமுக குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:


அதெல்லாம் எக்காரணத்தை கொண்டும் இரு கட்சிகளும் பிரியாது. காரணம் அதற்கான துணிச்சல் இப்போதைய அ.தி.மு.க.வினரிடம் கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அந்த துணிச்சல் இருந்தது. இப்போது மத்திய பா.ஜனதாவின் கிடுக்கிப்பிடியில் சிக்கி கிடக்கிறார்கள். அவர்கள் கோபத்தின் காரணமாகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் தான் பேசுகிறார்கள். இப்போது குமுறி குமுறி பேசினாலும் கடைசியில் ஒரே மேடையில்தான் குழுமி இருப்பார்கள். 


அண்ணாமலையின் பயணத்துக்கு கூட்டம் கூடுவது பணத்தை கொடுத்து கூட்டுவதுதான். அதெல்லாம் ஓட்டாக மாறாது. பா.ஜ.கவின் பலம் என்ன என்பதை கடந்த தேர்தலிலேயே பார்த்து விட்டோம். இப்போதைய தலைவரும், அப்போதைய தலைவரும் தோற்றார்கள். 23 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார்கள். 


தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காலடியில் இருக்கும் பா.ஜ.க, அ.தி.மு.க. மிரளுகிறதா என்று பார்ப்போம் என்று மிரட்டிப் பார்க்கிறது அவ்வளவுதான். இந்தியா கூட்டணியை பார்த்து மிரண்டு கிடக்கும் பா.ஜ.க என்னவெல்லாமோ வித்தை காட்டி பார்க்கிறது. ஆனால் எந்த வித்தையும் மக்களிடம் எடுபடாது என்றார் அவர்.