"லாகரேஞ்ச் 1" சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது ஆதித்யா எல்1.. இஸ்ரோ புதிய சாதனை

Su.tha Arivalagan
Jan 06, 2024,06:33 PM IST

டெல்லி: இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலமானது, தனது இலக்கான "லாகரேஞ்ச் பாயின்ட்1"  சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்து விட்டது. இதன் மூலம் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளது இஸ்ரோ மற்றும் இந்தியா.


சூரியனின் காந்தப் புயல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ ஏவிய விண்கலம்தான் ஆதித்யா எல் 1. இந்த விண்கலமானது, சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகரேஞ்ச் பாயின்ட் 1 அதாவது "எல் 1" என்ற சுற்றுப் பாதையிலிருந்து ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டது.


லாகரேஞ்ச் பாயின்ட் 1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே இருக்கக் கூடிய ஒரு பகுதியாகும். கிட்டத்தட்ட ஒரு புள்ளி போலத்தான் இதுவும். இந்த இடத்திலிருந்து சூரியனை ஆய்வு செய்வது எளிதானது மற்றும் பாதுகாப்பானது என்பதால் இந்த இடத்தை இஸ்ரோ தேர்வு செய்தது. இந்த புள்ளியானது, பூமியிலிருந்து கிட்டத்தட்ட 15 லட்சம்  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.




இந்த இடத்தை நோக்கி படிப்படியாக பயணித்து வந்த ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது தனது இலக்கான எல்1 சுற்றுப்பாதைக்குள் இன்று விடப்பட்டது. இதன் மூலம் இந்த விண்கலத்தின் பயணம் வெற்றி அடைந்துள்ளது. இந்த சுற்றுப் பாதையானது, சூரியனை பூமி சுற்றி வருவது போல சுழலக் கூடியது. எனவே ஆதித்யா எல் 1 விண்கலமும் சுற்றி வந்தபடி இருக்கும். 


கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 சாதனையைத் தொடர்ந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது. தற்போது இதன் பயணம் வெற்றிகரமாக அமைந்திருப்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.


பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு




ஆதித்யா எல் 1 விண்கலம் தனது இலக்கைத் தொட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.


துதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், இந்தியா இன்னும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.  இந்தியாவின் முதலாவது, சூரிய ஆய்வுக் கலமான, ஆதித்யா எல் 1 தனது இலக்கை எட்டியுள்ளது. நமது விஞ்ஞானிகளின் தொடர்ந்த, அயராத அர்ப்பணிப்பு, ஆய்வு, பணியின் விளைவு இது. மிகவும் சிக்கலான, சவாலான ஒரு விண்வெளி பயணம் இது.


இந்த அசாதாரண சாதனையைச் செய்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை நாட்டு மக்களோடு இணைந்து நானும் பாராட்டி வாழ்த்துகிறேன். மனித குலத்துக்காக மகத்தான அறிவியல் சாதனைகளை நாம் தொடர்ந்து செய்வோம் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.