குஜராத் டைட்டன்ஸ் அணியை விலைக்கு வாங்கப் போகிறது அதானி குழுமம்!

Meenakshi
Jul 19, 2024,04:36 PM IST

புதுடில்லி:  குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் பெரும்பாலான பங்குகளை வாங்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.


சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அந்த பங்குகள் அனைத்தையும் அதானி குழுமம் வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.




இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 2022ஆம் ஆண்டு சாம்பியன் பட்டமும், 2023ம் ஆண்டு 2ம் இடமும் பிடித்த அணி குஜராத் டைட்டன்ஸ். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தற்போதைய மதிப்பு ஒரு பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 ஆயிரத்து 363 கோடியே 25 லட்சம் துவங்கி, அதிகபட்சமாக 1.5 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.12 ஆயிரத்து 544 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தனது பெரும்பான்மையான பங்குகளை விற்க குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதை வாங்க அதானி குழுமமும், டோரன்ட் குழுமமும் முயற்சிக்கின்றன. ஆனால் அதானிக்கே குஜராத் டைட்டன்ஸ் போகும் என்று தெரிகிறது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி, சிவிசி கேப்பிட்டல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதானி, குஜராத் அணியின் அதிக பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.  


2021ம் ஆண்டில் அகமதாபாத் ஐபிஎல் உரிமையை வாங்குவதற்கான வாய்ப்பை இழந்த பின்னர் அதானி மற்றும் டோரண்ட் இருவரும் குஜராத் டைட்டன்ஸின் பங்குகளை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர்.