ஏன் இப்படி ஆதாாரம் இல்லாத.. குப்பையைக் கிளறிட்டிருக்கீங்க.. நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி!

Su.tha Arivalagan
Mar 14, 2024,06:10 PM IST

சென்னை:  தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.


நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்து விட்டார். இதையடுத்து சமூக ஊடகங்களில் பலரும் அவரை கேலி கிண்டல் செய்து விமர்சித்து வந்தனர். மேலும் சரத்குமாரின் இந்த முடிவுக்கு இதுதான் காரணமா என்று கேட்டும் வரலட்சுமி குறித்த சில தகவல்களை வெளியிட்டும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் வரலட்சுமி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் ஊடகங்களுக்கு அறிவுரையும் கோரிக்கையும் விடுத்துள்ளார். அவரது டிவீட்டில் உள்ளதாவது:




நமது திறமையான ஊடகங்கள் போலியான பழைய செய்தியை மீண்டும் சுற்றில் விடுவது பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. அன்பான ஊடகவியலாளர்களே, குறிப்பாக முன்னணி ஊடகங்களே, நீங்கள் ஏன் நல்லதொரு ஜர்னலிசத்தை கடைபிடிக்கக் கூடாது? உங்களது பிரபலங்களிடம் தவறுகளை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்க முயல்கிறோம், மக்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கைக் கொடுக்கிறோம், எங்களது வேலைகளை நாங்கள் சரியாக செய்கிறோம். நீங்கள் ஏன் உங்களது வேலையை மட்டும் செய்யக்கூடாது. 


நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன, அவற்றுக்கெல்லாம் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை செய்தால் நலம். எங்களது அமைதியை பலவீனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகள் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள். பழைய, குப்பைக்குப் போக வேண்டிய, அடிப்படை ஆதாரம் இல்லாத செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். எங்களை பெருமைப்படுத்தும் படியான நல்லதொரு ஜர்னலிசத்தை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.