"என் இனிய தனிமை".. மோசமான உறவில் சிக்குவதை விட.. சிங்கிளாக இருப்பது மேல்.. தபு

Su.tha Arivalagan
Nov 06, 2023,06:34 PM IST

மும்பை: 52 வயதாகியும் நான் சிங்கிளாக இருப்பதற்காக வருத்தப்படவில்லை.. மாறாக, இதை நான் கொண்டாடுகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை தபு.


நடிகை ஷபானா ஆஸ்மியின் உறவினரான தபு, இந்தியத் திரையுலகுக்குக் கிடைத்த மிகச் சிறந்த கலைஞர். இந்தி தவிர பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். நிறைய விருதுகளை அள்ளியுள்ளார். தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். போல்டான வெப் சீரிஸ்களிலும் நடித்து மிரட்டியுள்ளார்.


52 வயதைத் தொட்டுள்ளார் தபு. ஆனாலும் இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அது எனக்குத் தேவைப்படவில்லை என்றும் சிரித்தபடி கூறுகிறார் தபு.




இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:


மோசமான உறவுக்கு இது பெட்டர்


நீங்கள் ஏதாவது ஒரு உறவில் இருந்தால்தான் நீங்கள் முழுமை அடைவீர்கள், மகிழ்ச்சி அடைவர்கள் என்பது தவறான கருத்து. நீங்கள் ஒரு மோசமான உறவில் விழுந்து விட்டால், அது தனிமை தரும் கஷ்டத்தை விட பல மடங்கு அதிக கஷ்டத்தையே தரும். அதற்கு நீங்கள் தனிமையேயே அனுபவித்து விட்டுப் போய் விடலாம்.


ஆண், பெண் உறவு சற்று சிக்கலானது.  உங்களுக்கு சிறு வயது இருக்கும்போது காதல் குறித்த ஒரு சிந்தனை இருக்கும். வளர வளர அதில் மாற்றம் வரும். சுதந்திரமாக மாற விரும்புவீர்கள். சிலது உங்களை விட்டு போய் விடும். நான் எனக்கான உலகைக் காண விரும்பினேன். எனது கனவுகளை நான் கைவிட்டு விட்டால், அது என்னையே கைவிட்டது போலாகி விடும்.




உறவுகளுக்கு பாலின பேதம் தேவையில்லை


உறவு என்பது நம்மை சிக்கலில் தள்ளக் கூடாது.. மாறாக நம்மை விடுவிப்பதாக இருக்க வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதை விட இருவரும்  இணைந்து வளர அந்த உறவு உதவ வேண்டும். எனது சிந்தனை நிச்சயம் உங்களுக்கு வித்தியாசமாகத்தான் தெரியும். ஆனால் அது அப்படித்தான். ஆண், பெண் இணைந்தால்தான் உறவு என்ற கருத்தையே நான் முதலில் ஏற்கவில்லை. உறவுகளுக்கு பாலின பேதம் கிடையாது என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார் நடிகை தபு.


கடந்த 2017ம் ஆண்டு தபு ஒரு சுவாரஸ்யமான தகவலை ஒரு பேட்டியின்போது கூறியிருந்தார். அந்தப் பேட்டியில் தபு கூறுகையில், நான் சிங்கிளாக இருக்க காரணமே நடிகர் அஜய் தேவ்கன்தான்.  அவரும், நானும் கிட்டத்தட்ட 25 வருடமாக நண்பர்கள். எனது கசின் சமீர் ஆர்யாவின் பக்கத்து வீட்டுக்காரர்தான் அஜய் தேவ்கன். மூன்று பேருமே இணைந்தே வளர்ந்தோம். 


அஜய் தேவ்கன்தான் காரணம்


நான் சின்னப் பொண்ணாக இருந்தபோது நான் யாருடன் பேசுகிறேன் என்பதை உளவு பார்ப்பதுதான் சமீர், அஜய்யின் வேலையே. நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம் வந்து விடுவார்கள்.  நான் யாராவது ஆணுடன் பேசினால், அவர்களை மிரட்டி பேசக் கூடாது என்று கூறி அனுப்பி விடுவார்கள். 




இவர்களைத் தாண்டி நான் யாருடனும் பேச முடியாது.. பேசவும் விட மாட்டார்கள். இப்படி எல்லாப் பேரையும் விரட்டி விட்டால் பிறகெப்படி நான் காதலிப்பது, கல்யாணம் செய்து கொள்வது.. நான் இன்னிக்கு சிங்கிளாக இருப்பதற்கு காரணமே இந்த அஜய்தான் என்று ஜாலியாக கலாய்த்திருந்தார்.