செளந்தர்யா விபத்தில் மரணிக்கவில்லையா.. கொலை செய்யப்பட்டாரா?.. புதிய புகாரால் திடீர் பரபரப்பு

Su.tha Arivalagan
Mar 12, 2025,06:45 PM IST

கம்மம், ஆந்திரப் பிரதேசம்: மறைந்த நடிகை செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் மரணிக்கவில்லை என்றும் அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றும் கூறி புதிய புகார் கிளம்பியுள்ளது. இது திரையுலக வட்டாரத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ், தெலுங்கு, கன்னடம் என பன்மொழிகளில் நடித்து வந்து வந்த நடிகைதான் செளந்தர்யா.  கர்நாடகத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட தெலுங்கில்தான் அதிகம் நடித்துள்ளார்.தமிழில் படையப்பா படத்தில் இவரது வேடம் பலரையும் கவர்ந்தது. அதேபோல அருணாச்சலம் படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடித்த காதலா காதலா பெரிதாக பேசப்பட்டது.


விஜயகாந்த்துடன் தவசி, கார்த்திக்குடன் பொன்னுமணி என பல படங்களில் நடித்துள்ள செளந்தர்யாவுக்கு, பார்த்திபனுடன் நடித்த இவன் படத்திலும் இவரது கேரக்டர் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் விஜயகாந்த்தின் சொக்கத் தங்கம் ஆகும். கன்னடத்தில் இவர் நடித்த ஆப்தமித்ரா படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழில் வெளியான சந்திரமுகி படத்துக்கு முன்பு பி.வாசு இயக்கி படம்தான் ஆப்தமித்ரா.




தனது கடைசிக்காலத்தில் அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் செளந்தர்யா. 2004ம் ஆண்டு ஆந்திராவின் கரீம் நகரில் நடந்த பாஜக - தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது சகோதரருடன் தனியார் ஹெலிகாப்டரில்  சென்ற செளந்தர்யா, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 31தான்.  மேலும் அப்போது அவர் கர்ப்பமாகவும் இருந்தார். 


இந்த நிலையில் செளந்தர்யா மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து அவரது மரணம் சர்ச்சையாகியுள்ளது. இது விபத்து அல்ல, கொலை என்று சிட்டிமல்லு என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரைப் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் குற்றம் சாட்டியிருப்பது வேறு யாரையும் அல்ல.. தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய நபரான நடிகர் மோகன்பாபு மீதுதான் சிட்டிமல்லு புகார் கூறியுள்ளார்.


செளந்தர்யாவுக்குச் சொந்தமான ஒரு இடத்தை தனக்கு விற்க வேண்டும் என்று மோகன்பாபு தொடர்ந்து அவரை கட்டாயப்படுத்தி வந்தாராம். செளந்தர்யா மற்றும் அவரது சகோதரர் அமர்நாத்துக்கு அவர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். ஆனால் நிலத்தைத் தர முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்தது. ஆனால் அந்த விபத்தை ஏற்படுத்தியதே மோகன்பாபுவின் சதித் திட்டம் என்று சிட்டி மல்லு கூறுகிறார்.



செளந்தர்யாவுக்குச் சொந்தமான ஷாம்ஷாபாத் இடத்தைத்தான் தெலுங்கு நடிகர்  கேட்டு வந்ததாக தனது புகாரில் கூறியுள்ளார் சிட்டி மல்லு. செளந்தர்யா மறைவுக்குப் பிறகு இந்த இடத்தை மோகன்பாபு மிரட்டி எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் புகார் தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.