"ஸ்னேஹாலயா சில்க்ஸ்".. முழுக்க முழுக்க பட்டுச் சேலைகள்தான்.. ஜவுளிக்கடை திறந்தார் நடிகை சினேகா!

Su.tha Arivalagan
Feb 12, 2024,01:16 PM IST

சென்னை: புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகா சென்னை தி.நகரில் ஒரு புத்தம் புதிய ஜவுளிக்கடையைத் திறந்துள்ளார். முழுக்க முழுக்க பட்டுச் சேலைகளுக்கான பிரத்யேக கடையாம் இது.


எத்தனையோ இளம் பெண்கள் சேலையை விரும்பிக் கட்ட முக்கியக் காரணமாக இருப்பவர் சினேகா என்று தைரியமாக  சொல்லலாம். காரணம் அவர் படங்களில் சேலை கட்டி நடித்தால் அந்தப் படத்தில் அவர் மட்டும் தூக்கலாக தெரிவார்.. சேலைக்காக அளவெடுத்து செய்தாற் போல அவர் இருக்கிறாரோ என்று எண்ணும் அளவுக்கு அவரும் சேலையம் அப்படி பாந்தமாக பொருந்தி வருவார்கள்.


மேலும் அவர் நடிப்பில் வெளியான சேலை விளம்பரங்கள்தான் பலரையம் சேலை மோகம் கொள்ள வைத்திருக்கும். சேலையில் அத்தனை அழகாக இருப்பார் சினேகா. ஏற்கனவே அழகாக இருக்கும் அவர், சேலையில் மேலும் பல படி ஜொலிப்பார். அதிலும் பட்டுப் புடவையில் சினேகா தோன்றும்போது வேற லெவல் அழகில் இருப்பார்.




அப்படிப்பட்ட சினேகா மனதில் ரொம்ப நாளாவே பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் கடை திறக்க வேண்டும் என்ற ஆசை ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக பல ஊர்களுக்குப் போய் பட்டுச் சேலைகள் குறித்து விசாரித்துள்ளார், அதுகுறித்து தீவிரமான செயல்பாடுகளிலும் இறங்கிய அவர் தற்போது தனக்கே தனக்கான சொந்தமான ஒரு ஜவுளிக் கடையை திறந்திருக்கிறார். 


சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில், ஸ்னேஹாலயா சில்க்ஸ் என்ற அந்த ஜவுளிக்கடை இன்று திறக்கப்பட்டுள்ளது.




முழுக்க முழுக்க விதம் விதமான பட்டுச் சேலைகளுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கடைக்கு வந்தால் போதும், விரும்பிய சேலையை விதம் விதமாக வாங்கிச் செல்ல முடியுமாம். பட்ஜெட் விலை முதல் காஸ்ட்லி விலையிலான பட்டுச் சேலைகள் வரை அனைத்தும் இங்கு கிடைக்குமாம். திறப்பு விழாவில் சினேகாவின் தோழியரான பல்வேறு நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். நடிகைகள் வனிதா விஜயக்குமார், சுஜா வருணி உள்பட பலரும் வந்துள்ளனர்.


பட்டுச் சேலையில் சினேகாவும் பட்டு வேட்டி சட்டையில் கணவர் பிரசன்னாவும் சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்று மகிழ்ந்துள்ளனர்.


தி.நகருக்கு என்று ஏற்கனவே பல அடையாளங்கள் உள்ளன.. இனி சினேகாவும் ஒரு புதிய அடையாளமாக மாறியுள்ளார்.. அதாவது அவரது ஸ்னேஹாலயா சில்க்ஸ்!