"திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்"..  நடிகை ஷீலா திடீர் அறிவிப்பு

Su.tha Arivalagan
Dec 02, 2023,05:58 PM IST
சென்னை: நடிகை ஷீலா திருமண உறவிலிருந்து விலகுவதாக டிவீட் போட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கூத்துப்பட்டறையிலிருந்து வந்த கலைஞர்தான் ஷீலா. அட்டகாசமான நடிகை.. அதை விட முக்கியமாக அருமையான டான்ஸர். பரதநாட்டியம் மட்டுமல்லாமல் பல்வேறு நடனங்களிலும் சிறந்தவர். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர். குறும்படங்கள்தான் இவரது முதல் அடையாளம்.

ஆறுவது சினம் மூலம் பெரிய திரைக்கு வந்த ஷீலா, பின்னர் டிவிக்குத் திரும்பினார். அழகிய தமிழ் மகள் சீரியல் இவருக்கு பெரும் பிரபலத்தைக் கொடுத்தது.  சில சீரியல்களில் நடித்த ஷீலா மீண்டும் சினிமாவுக்கு வந்தது அசுரவதம் படம் மூலமாக. டூலெட் படம்தான் இவர் நாயகியாக நடித்த முதல் படம். அப்படத்தில் இவரது ரோல் பேசப்பட்டது. 
தொடர்ந்து மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ், நம்ம வீட்டுப் பிள்ளை என சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஷீலாவுக்கு பெரிய பிரேக் கொடுத்தது திரவுபதி படம்தான். ஜாதி அரசியல் குறித்துப் பேசிய அப்படம் ஷீலாவுக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது.



தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த ஷீலாவுக்கு மண்டேலா படமும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. யோகிபாபு ஜோடியாக இதில் நடித்திருப்பார்.  பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் என பல படங்களில் நடித்துள்ள ஷீலா கடைசியாக நடித்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதுதவிர பேட்டைக்காளி என்ற வெப் தொடரிலும் நடித்துள்ள ஷீலா தற்போது தனது திருமண உறவை முறித்துக் கொள்வதாக டிவீட் செய்துள்ளது பேசு பொருளாகியுள்ளது.

இவரது கணவர் பெயர் தம்பி சோழன். இவரும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்தவர்தான்.  இது காதல் திருமணம். வீட்டினரின் கடும் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள். அதுவும் நடுக் கடலில் படகில் வைத்து கல்யாணம் நடந்ததாம். திருமண பந்தம் முறிவுக்கான காரணம் என்ன தெரியவில்லை.. !