சிறைக்குப் போகும் சந்திரபாபு நாயுடு.. ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய ரோஜா!

Meenakshi
Sep 11, 2023,12:24 PM IST
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறை சென்றதற்கு ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கேக் வெட்டியும், வெடிவெடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து  2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் அமைச்சராக இருந்து உள்ளார்.  இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை  சார்பாக, கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். 



நேற்று காலை விஜயவாடாவில் உள்ள மாநில போலீசின் குற்றப் புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை குழு அலுவலகத்தில் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட உள்ளார்.  இந்த வழக்கில் 37வது குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு சேர்க்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, ஜாமீன் கேட்டு  சந்திரபாபு நாயுடு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனால்  அவர் சிறை செல்வது உறுதியானது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு சிறை செல்வதை ஆந்திர மாநில சுற்றுள்ள துறை அமைச்சர் ரோஜா  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வெடி வெடித்து கொண்டாடியுள்ளார்.தொண்டர்களுக்கு இனிப்பும் வழங்கியுள்ளார். முகம் முழுக்க மகிழ்ச்சியில் ரோஜா கொண்டாடிய வீடியோ காட்சிகள் பரபரப்பாக பரவி வருகின்றன.