இந்தப் படம் ஏன் கூடாது என்பதுதான்.. காதல் என்பது பொதுவுடமை எடுக்க முதல் காரணம்.. ரோகிணி பளிச்!

Su.tha Arivalagan
Feb 11, 2025,12:54 PM IST

சென்னை: காதல் என்பது பொதுவுடமை  படம் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமான படம். இந்தப் படத்தை ஏன் எடுக்கக் கூடாது என்பதுதான் இந்தப் படத்தை எடுக்க முதல் காரணமாக அமைந்தது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.


வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் காதல் என்பது பொதுவுடமை. இரு பெண்களுக்கு இடையே ஏற்படும் உறவு குறித்த படம் இது.  ஜெயப்பிரகாஷ் இதை இயக்கியுள்ளார்.


இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படம் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த விழாவில்,  பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி,  இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன்,  இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.




நாயகியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், "ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன். என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடில. அன்னிக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா, என் ஃபர்ஸ்ட் தமிழ்ப்படத்தைப் பத்திப் பேசாம ஜெய்பீம் பத்தி என்னால கண்டிப்பா பேச முடியாது. அதனால் இன்னிக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார். நாங்க ரொம்பப் பெருமையா, சந்ரோஷமா, காதல் என்பது பொதுவுடைமை படத்தை உங்க முன்னாடி கொண்டு வர்றோம். 


ஓரிரு நாளுல, இந்தப் படம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு நாங்க நம்பலை. ஆனா நிச்சயம் நம்மைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தி நல்ல புரிதல் ஏற்படுங்கிறதை நாங்க நம்புறோம். அதைத்தான் இந்தப் படத்தோட வெற்றியா பார்க்கிறோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களான வினீத் சார், ரோகிணி மேம் கூட நடிக்கக் கிடைச்ச வாய்ப்பை ஆசிர்வாதமாக கருதுறேன். 


நடிகை ரோகிணி பேசுகையில், "இந்தப் படம் ஏன் 'கூடாது' என்பதுதான் படம் எடுக்கிறதுக்கான முதல் காரணம். 'இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்க'ன்னு சொன்னபோது, 'இல்ல என் தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு'ன்னு ஒரு இயக்குநர் இப்படத்தைக் கொண்டு வந்திருக்காரு. இது சம்பந்தமான உரையாடலை எங்குத் தொடங்கவேண்டும் என யோசித்து, குடும்பத்தில் துவங்கணும் என ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கார். நான் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இந்த மாதிரி ஷேடுள்ள கேரக்டரில் நடிச்சதில்லை. இந்த லக்‌ஷ்மி கேரக்டரை என்னால் சரியாகப் பண்ண முடியுமான்னு நினைச்சேன். 


எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கோ, அத்தனை கேள்விகளையும் லக்‌ஷ்மி மூலமாக இயக்குநர் கேட்க வச்சிருக்காரு. நான் சமூகத்தின் முகமாக இந்தப் படத்துல வர்றேன். அது ரொம்பச் சேலஞ்சிங்கா இருந்துச்சு. அதோட, ரொம்ப அன்பான ஒரு அம்மாவோட பரிதவிப்பும் லக்‌ஷ்மியிடம் இருந்தது. நான் நிறைய அம்மா பாத்திரம் பண்ணியிருக்கேன். விட்னெஸ், தண்டட்டி, 3 என நான் பண்ண ஒவ்வொரு அம்மாவும் வேற வேற அம்மா. ஹீரோக்கு அம்மாவா நடிக்கணும் என இயக்குநர் யாராச்சும் சொன்னா, 'அம்மாங்கிறது ஒரு கதாபாத்திரமே கிடையாது. ஹீரோக்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவங்களால கதையில் ஏதாச்சும் நடக்குதா?' எனக் கேட்பேன். 


சில படத்துல தான் நான் ரொம்ப சரியா நடிருக்கேன் எனத் திருப்தியா இருக்கும். அதுல இந்த லக்‌ஷ்மி கேரக்டரும் ஒன்னு. இது எங்களோட கதை. ஒரு அம்மா - பொண்ணு கதை. இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும். இங்கயும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ஆடியன்ஸ் ரெடியா இருப்பாங்க என்பதை நாம் நிரூபிச்சுக் காட்டணும். எல்லாத்தையும் விட, பேசாப்பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்க செய்திருக்கிறோம்" என்றார்.


இயக்குனர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில். நானும் எனது நண்பர் சுரேஷும் உருவாக்கிய கதை தான் இந்த காதல் என்பது பொதுவுடைமை'. முதலில் இதை தமிழில் எடுக்க நினைக்கவில்லை, நண்பர்கள் தான் இந்த படத்தை தமிழில் எடுக்கலாம் என்று எனக்கு ஊக்கமளித்தார்கள்.



சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசைக்காக நிறைய பேர் இங்கே வந்திருக்கிறீர்கள், சிறிய வேலையாக இருந்தாலும் தளராமல் அதை செய்ய வேண்டும். அது தானாக நமது இலக்கை அடையும். இந்த திரைப்படத்தை நாங்கள் 28 நாட்களில் எடுத்து முடித்துள்ளோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களால் தான் இதனை இவ்வளவு சீக்கிரம் முடித்தோம்.




இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்தார். நான் தமிழில் படம் எடுக்க முயற்சித்த போது சில பேர் மலையாளத்திலும், ஹிந்தியிலும் எடுக்க சொன்னார்கள். நான் கோபத்தில் வேண்டுமென்றே எடுத்தேன்  தமிழ்நாட்டில் படத்தை வாங்க OTT தளத்தில் வாங்க மறுக்கின்றனர். இதனால் படத்தை வெளியிடுவதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் எனக்கு டிஸ்ட்ரிபியூட்டர் தனஞ்செயன் உதவியுள்ளார் அவருக்கு  நன்றி. மற்றும் இந்தப் படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.


இந்த படத்தை வெளியிடும்  தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில்... தமிழ் சினிமாவில் இப்படிபட்ட படம் மெயின் ஸ்க்ரீனில் வருவதில்லை. தமிழ் சினிமாவில் ஒரு வாரத்திற்கு 7 இல் இருந்து 8 திரைப்படங்கள் வருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒரே நேரத்தில் நிறைய  படங்கள் வெளி வந்தால் மக்கள் பார்க்க மிகவும் சிரமமாக இருக்கும்  பொறுத்திருந்து வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறேன், என்றார்.


இயக்குநர் பாலாஜி தரணி தரண் 


இந்த படத்தை 10 நாட்களுக்கு முன்பாக நான்  பார்த்தேன். படம் முடிந்த பின்பு அந்த படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. அனைவரும் பேசுவதற்கு கூச்சப்படும் ஒரு விஷயத்தை அழகாக அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ்.படம் மிகவும் அருமையாக இருக்கிறது படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


இயக்குநர் சசி 


படத்தில் நான் பின்னணி இசையையும், பாடலையும் மிகவும் ரசித்தேன். இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சில இயக்குநர்கள் மக்களுக்கு பிடித்த விஷயத்தை எடுப்பார்கள். சில பேர் தங்களுக்கு பிடித்த படத்தை எடுப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் இந்த காலத்தில் ஒரு முக்கியமான படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.


நடிகர் மணிகண்டன் 


நான் இந்த படத்தை பார்க்கவில்லை. அதனால் இந்த படத்தை குறித்து என்னால் தெளிவாக பேச முடியாது. ஆனால் இந்த படத்தில் பணி புரிந்த எனது நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் இயக்குனர் ஜெயபிரகாஷ் தன்னுடைய கொள்கையில் அதீத பிடிப்போடு இருப்பவர். அவருக்கு திரைப்பட விழாவில் வெளியிடும் படத்திற்கும், சாதாரணமாக வெளியிடப்படும் கமர்ஷியல் திரைப்படத்திற்கும் இடையில் உள்ள இடை வெளியை சரி செய்ய நினைத்து கோபத்துடன் இதனை எடுத்துள்ளார். அதேபோல செங்கனி இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஜெய் பீம் படத்தில் நடிக்கும் போது டப்பிங் செய்வதற்கு அடிக்கடி நான் அழைப்பேன். தயங்காமல் வந்து செல்வார்கள் மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இசை அமைப்பாளர் கண்ணன் நாராயணன் 




'தலைக்கூத்தல்' படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைத்துள்ளேன். தற்போதைய சூழலில் படத்தின் முதல் பாடல் மற்றும் அனைத்து பாடல்களையும் ஆண்களே பாடுகின்றனர். இந்த படத்தில் பெண் பாடல் வேண்டும். என்பதற்காக சிறப்பாகவும் படத்திற்கு ஏற்ற மாதிரியும் பாடல் கட்சி அமைந்துள்ளது. 


நடிகர் வினித் 


நான் இந்த படத்தில் நடிக்கும் போது படம் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் படம் பார்க்கும்போது அற்புதமாக வந்திருக்கிறது. படம் குறித்து நான் அதிகமாக பேசவில்லை. அது மக்கள் கண்டிப்பாக பார்த்து பேசுவார்கள். இந்த மாதிரியாக படங்களில் தான் முக்கியமான கருத்துக்கள் பலவற்றை  பார்க்க முடிகிறது. இந்த படம் வெளிப்படையான விவாதத்தை வைக்கிறது இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு படமாக அமையும் கண்டிப்பாக இது ஒரு  வெற்றி படமாக அமைய எனது வாழ்த்துக்கள்