பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் கார் மோதி .. சாலையில் கிடந்த முதியவர் பலி.. சிசிடிவியில் அம்பலம்!

Manjula Devi
Aug 28, 2024,11:37 AM IST

சென்னை: பிரபல சீரியல் நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் 55 வயதான மஞ்சன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.


சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் நேற்று இரவு 55 வயதான மஞ்சன் என்பவர்  குடிபோதையில் சாலையில் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த கார் மஞ்சன் மீது ஏறியுள்ளது.  இதில் மஞ்சன் வேதனையில் அலறி துடி துடித்தார்.




இந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்தபோது கார் ஒன்று நிற்காமல் சென்று கொண்டிருந்தது. உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மஞ்சனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் ‌.


இதனை அறிந்த கிண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் வேகமாக வந்த கார் ஒன்று மஞ்சனை ஏற்றிவிட்டு சென்றது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதேசமயம் அந்த காரின் பதிவு எண்ணையும் போலீசார் கண்டறிந்தனர். 

இந்த பதிவு எண்ணின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் . விசாரணையில் அடையார் பகுதியை சேர்ந்த சீரியல் நடிகை ரேகாவுக்கு சொந்தமான கார் என்பதும், சீரியல் நடிகை கார் ஓட்டுநர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்தை ஏற்படுத்திய சீரியல் நடிகை ரேகா கார் ஓட்டுநர் பாண்டியை  போலீசார் கைது செய்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்