மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் ரம்பா.. வாங்க வாங்க.. ரசிகர்கள் ஆரவார வரவேற்பு!

Manjula Devi
Jul 23, 2024,02:55 PM IST

சென்னை:   நடிகை ரம்பா தனக்குப் பிடித்தமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தொடை அழகி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். இவர் முதன் முறையாக தமிழில் உழவன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன்,செங்கோட்டை, அடிமை சங்கிலி, அருணாச்சலம், ராசி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உன்னருகே நானிருந்தால், மின்சார கண்ணா உள்ளிட்ட  பல   சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 




குறிப்பாக தமிழில்  உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென்ற அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டவர். இப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. அதில் அவர் குட்டப்பாவாடையை போட்டுக்கொண்டு அழகிய லைலா என்று  நடனம் ஆடுவதை இன்று வரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரம்பா என்றாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு மனம் கவர்ந்த கனவு கன்னி. 


தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம், போஜ்புரி, போன்ற மொழிகளிலும் தனது  நடிப்பால் கால் பதித்தவர். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டு கனடா நாட்டு தமிழ் தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நீண்ட காலமாக திரை வாழ்க்கையில் தலை காட்டாமல் அவ்வப்போது ரியாலிட்டி ஷோகளில் மட்டும் என்ட்ரி கொடுத்து வந்தார். 




இதற்கிடையே தனது சோசியல் மீடியா பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து கொண்டு அவ்வப்போது தனது அழகிய குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சிகளை பகிர்ந்து வந்தார்.அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்பா தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதுடன் ரம்பா மீண்டும் நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வந்தனர். 


இந்த நிலையில் நடிகை ரம்பா சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க விரும்புவதாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 


பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன் அதற்குப்பின் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏற்பட்டு விட்டது நடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என பலரும் கேட்கின்றனர் எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.