கேரவனில் ரகசிய கேமரா வைப்பார்கள்.. நிம்மதியா உடை மாற்ற முடியாது.. ராதிகா வெளியிட்ட ஷாக் தகவல்!

Aadmika
Aug 31, 2024,07:07 PM IST

சென்னை : நடிகைகளின் கேரவனில் ரகசிய கேமிராக்கள் வைத்து, அவர்கள் உடை மாற்றுவதை படம்பிடிப்பதாக நடிகை ராதிகா பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த விசாரணையை நீதிபதி ஹேமா கமிட்டி சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு பிறகு மலையாள திரையுலகில் மட்டுமின்றி பல மொழிகளிலும் இருக்கும் திரையுலகிலும் பெரும் புயல் கிளம்பி உள்ளது. மலையான திரையுலகில் பலர் மீது வழக்கு தொடரப்பட்டு, நடிகர் சங்கமே கலைக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் நடிகை சமந்தா கோரிக்கை வைத்துள்ளார்.




இந்நிலையில் மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த நடிகை ராதிகா சரத்குமார், நான் இதுவரை இது போன்ற பல நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன். மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நான் ஒரு மலையாள படத்தில் நடித்த போது ஆண்கள் சிலர் ஒரு குழுவாக அமர்ந்து, மொபைல் போனை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எதை பார்த்து, சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தெரிந்த ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.


நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமிராக்கள் பொருத்தி, நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடித்து அந்த வீடியோக்களை பார்த்து தான் அவர்கள் ரசித்து, சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். இதை கேட்ட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதோடு, எந்த நடிகையின் பெயரை சொன்னாலும் அவர்கள் உடை மாற்றும் வீடியோ இவர்களிடம் இருப்பதை எடுத்துக் காட்டுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதை எனக்கு தெரிந்த சில நடிகைகளிடம் சொல்லி நான் எச்சரித்தேன். அன்று முதல் நாள் கேரவனில் உடை மாற்றுவதை நிறுத்தி விட்டேன். ஓட்டலில் ரூம் எடுத்து, அங்கு சென்று தான் உடை மாற்றுவேன் என்றார். 


ராதிகாவின் இந்த பேட்டி மலையாள திரையுலகில் மேலும் பரபரப்பை கிளப்பு உள்ளது.  ராதிகாவைப் போல அனைத்து நடிகைகளும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டால், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண முடியும் என்று பலர் கூறுகிறார்கள். அதேசமயம், இனிமேல் பாலியல் ரீதியாக யாரேனும் அத்துமீறினால் உடனடியாக அதை பிரச்சினையாக்க நடிகைகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்