இரட்டைக் குழந்தைகளுடன்.. வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை நமீதா மீட்கப்பட்டார்!

Su.tha Arivalagan
Dec 06, 2023,06:54 PM IST

சென்னை: நடிகை நமீதா மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.


நடிகை நமீதா துரைப்பாக்கம்  பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர், இரட்டைக் குழந்தைகளுடன் நமீதா அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியே வெள்ளக்காடானது. இந்த வெள்ளத்தால் துரைப்பாக்கம் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது. 


இதில்  நமீதா வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பும் சிக்கிக் கொண்டது. அங்கு இடுப்புக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படைக்குத் தகவல் போனது. இதையடுத்து இன்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். நமீதா குடும்பத்தினர் மற்றும் அங்கு வசித்து வரும் பலரையும் மீட்டு படகு மூலம் வெளியே கொண்டு வந்தனர்.




இதுகுறித்து நமீதா கூறுகையில், அக்கம் பக்கத்தினர் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டோம். அந்தக் குடியிருப்பிலேயே நாங்கள்தான் கடைசியாக இப்போது மீட்கப்பட்டுள்ளோம். எங்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு நன்றி என்றார் நமீதா. நமீதா, கணவர், குழந்தைகள் தவிர அவர் வளர்த்து வரும் நாய்களும் கூட பத்திரமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டன.


ஏற்கனவே இதேபோல இந்தி நடிகர் அமீர் கான், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரையும் வெள்ள பாதிப்பிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டது நினைவிருக்கலாம்.