#Vote4INDIA.. இந்தியா கூட்டணியின் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவீட் போட்ட குஷ்பு.. ஷாக்கான பாஜக!

Su.tha Arivalagan
Apr 19, 2024,03:43 PM IST

சென்னை: இந்தியா கூட்டணிக் கட்சியினரும், அவர்களது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வரும் #Vote4INDIA ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டிவீட் போட்டதால் பரபரப்பாகி விட்டது.


நடிகை குஷ்பு பாஜகவில் இருக்கிறார். தேசிய மகளிர் ஆணையத்திலும் உறுப்பினராக உள்ளார். வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டையைக் கிளப்பும் குஷ்பு இந்த முறை சரிவர பிரச்சாரம் செய்யவில்லை. 


சென்னையில் ஓரிரு நாட்கள் பிரச்சாரம் செய்த குஷ்பு பின்னர் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி பிரச்சாரத்திலிருந்து விலகி விட்டார். இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் அவர் கடிதம் எழுதி விளக்கியிருந்தார். அதேசமயம், வேலூர் தொகுதியில் குஷ்புவின் கணவர் இயக்குநர் சுந்தர் சி அங்கு போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசியிருந்தார்.




இந்த நிலையில் இன்று தனது கணவர், இரு மகள்களுடன் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் குஷ்பு. அதன் பின்னர் அவர் நாங்கள் ஓட்டுப் போட்டு விட்டோம், நீங்களும் உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள் என்று டிவீட் போட்டிருந்தார். அதில் அவர் பயன்படுத்திய ஹேஷ்டேக்தான் தற்போது பேசு பொருளாகி விட்டது.


இந்தியா கூட்டணிக் கட்சியினர் பயன்படுத்தி வரும் வோட் பார் இந்தியா என்ற ஹேஷ்டேக்கை குஷ்பு பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து அதை பயன்படுத்தியும் வருகிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் குஷ்பு மனம் மாறி விட்டார், என்ன இருந்தாலும் தாய் வீட்டை மறக்க முடியாது இல்லையை என்று கலகலப்பா டிவீட் போட்டுக் கொண்டுள்ளனர்.


காக்கா உட்கார பனம் பழம் என்பது இதுதான் போல.. குஷ்பு ஏதோ ஒரு டிவீட் போட அது வேறு மாதிரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.. ஆனால் இதை குஷ்பு பொருட்படுத்தவில்லை. பதிலுக்குப் பதிலும் தரவில்லை.