"சேரி".. சர்காசமாகத்தான் சொன்னேன்.. பிடிக்காட்டி ஒன்னும் பண்ண முடியாது.. குஷ்பு விளக்கம்

Su.tha Arivalagan
Nov 25, 2023,05:28 PM IST

சென்னை: சேரி என்ற வார்த்தையை எனது டிவீட்டில் சர்காசமாகத்தான் சொன்னேன். அது பிடிக்காட்டி நான் ஒன்னும் பண்ண முடியாது. நான் திமுகவைத்தானே சொன்னேன்.. ஏன் காங்கிரஸ்காரங்க பொங்கிட்டு வர்றாங்க என்று  நடிகை குஷ்பு கூறியுள்ளார்.


நடிகை குஷ்பு மன்சூர் அலிகான் விவகாரத்தில் போட்ட டிவீட்டில் சேரி பாஷைக்கெல்லாம் என்னால் பதில் தர முடியாது என்று கூறியிருந்தார். இது தர்ச்சையைக் கிளப்பியது. அவருக்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை கடும் எச்சரிக்கை  விடுத்துள்ளது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போலீஸில் புகாரும் தரப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சென்னை வந்த நடிகை குஷ்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் எனது டிவீட்டில் சர்காசமாகத்தான் சொன்னேன். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் என்னால் ஒன்றும் பண்ண முடியாது. அதை விடுங்க நான் திமுககாரங்களுக்குத்தானே டிவீட் போட்டேன். நடுவுல காங்கிரஸ் காரங்க ஏன் பொங்கிட்டு வர்றாங்க. திமுகவுக்கு வேலை பாக்கறவங்களா காங்கிரஸ். கூட்டணிக் கட்சி என்றாலும் கூட திமுகவே பொங்காத போது இவங்க ஏன் ஆக்ரோஷமாக பேசறாங்க. அதுதான் எனக்குப் புரியலை.




நான் தவறான அர்த்ததிலேயே பேசவில்லை. பிறகு ஏன் வருத்தம் தெரிவிக்கணும். சேரி என்ற வார்த்தை அரசு ரெக்கார்டிலேயே இருக்கே.. வேளச்சேரி இருக்கே.. செம்மஞ்சேரி இருக்கே.. உங்களுக்குத் தமிழ் தெரியும்தானே.. எனக்குத் தெரியாதுன்னே வச்சுப்போம்.. சேரிக்கு என்ன அர்த்தம். நீங்க விளக்கம் கொடுங்க. அந்த மக்களுக்கு நமக்கு சமமா உட்காரத் தகுதி கிடையாதா.. அவங்களுக்கு குறிப்பிட்ட இடம்தான் என்பதை நான் விரும்பவில்லை. அந்த அர்த்தத்தில் நான் சொல்லவும் இல்லை. பேசவும் மாட்டேன்.  


என்னைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். இத்தனை வருடத்தில் நான் யாரையும் தகாத வார்த்தை சொல்லி பேசியதில்லை. குறை சொல்லியதும் இல்லை. புரிஞ்சுக்காதவங்களைப் பற்றி நான் என்ன செய்ய முடியும். எனக்குத் தெரிந்த பாஷையில் நான் பேசுகிறேன். பேசுவேன் என்றார் நடிகை குஷ்பு.


மன்னிப்பு கேட்கும் வரை விட மாட்டோம்




இதற்கிடையே நடிகை குஷ்புவின் பேட்டி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் கூறுகையில், நடிகை குஷ்பு இப்போதுதான் ஊருக்கு வந்துள்ளார். இனிமேல்தான் எங்களது போராட்டம் தீவிரமாகும். யாருமில்லாத வீட்டில் போய் எப்படி முற்றுகையிட முடியும். இப்போதுதானே வந்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நாங்க விடப் போவதில்லை. கண்டிப்பாக வீட்டை முற்றுகையிடுவோம்.


குஷ்பு ஒரு விளம்பரப் பிரியர். தனது இருப்பை நிலை நிறுத்துவதற்காக எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்கும் வகையில் எங்களது போராட்டம் இருக்கும். அவர் இன்னும் தான் போட்ட டிவீட்டைக் கூட நீக்கவில்லை என்றார் ரஞ்சன் குமார்.