நான் மாட்டிறைச்சியோ அல்லது  வேறு எந்த இறைச்சியையுமோ சாப்பிடுவதில்லை.. கங்கனா ரனாவத்

Meenakshi
Apr 08, 2024,05:36 PM IST

மண்டி: நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த வகையான இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது என்று இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.


விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் கட்சி ஊர்வலம்,  மீட்டிங், வாகன பேரணி என வேட்பாளர்கள், தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். 2024ம் ஆண்டு தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலர் வாக்கு சேகரித்து வந்தாலும், ஒரு சில சினிமா பிரபலங்கள் தேர்தலிலும் போட்டியிட்டு வருகின்றனர். 


அந்த வகையில் வேட்பாளராக களம் காண்பவர் தான் கங்கனா  ரனாவத். இவர் தலைவி என்ற படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு முன்பு இந்தியில் நடித்து வந்தார். நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் களம் இறங்கியுள்ளார். கங்கனா ரனாவத் தற்பொழுது தீவிர பிரச்சாரமும் செய்து வருகிறார். 




இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வாடேட்டிவார் என்பவர் கங்கனா மாட்டிறைச்சி சாப்பிடக்கூடியவர் என்று கூறினார். இதனால் கடும் கோபம் அடைந்த கங்கனா ரனாவத்  தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், நான் மாட்டு இறைச்சி அல்லது வேறு எந்த வகையான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. மேலும் என்னை பற்றி தவறான கருத்துக்கள் தற்போது பரப்பப்பட்டு வருவது வெட்கக் கேடானது. நான் பல நாட்களாக யோாக மற்றும் ஆயுர்வேதத்தைப் பின்பற்றி வருகின்றேன். என் மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். நான் ஒரு பெருமை மிக்க இந்து என்பதும் அவர்களுக்கு தெரியும். அவர்களை தவராக வழிநடத்த முடியாது. இப்போது வதந்திகளைப் பரப்பும் முயற்சியால் எனது பிம்பம் சிதையாது. ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியுள்ளார்.