கெளதமி புகார் எதிரொலி.. அழகப்பன், மனைவி, குடும்பமே கூண்டோடு தலைமறைவு!

Su.tha Arivalagan
Oct 23, 2023,02:39 PM IST

சென்னை: நடிகை கெளதமி குற்றம் சாட்டியுள்ள சி. அழகப்பன் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் என்று தெரிய வந்துள்ளது. தற்போது கெளதமி புகாரைத் தொடர்ந்து அவரும் அவரது குடும்பத்தினரும் கூண்டோடு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.


நடிகை கெளதமி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணமாக அவர் கூறியிருப்பது தன்னை மோசடி செய்த சி. அழகப்பன் என்பவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவாக இருப்பதே காரணம் என்று கூறியுள்ளார் கெளதமி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நடிகை கெளதமி புகார் கூறியுள்ள சி. அழகப்பன் என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர். அவர்தான் பவர் பத்திரம் மூலம் நடிகை கெளதமியின் சொத்துக்களை தனது குடும்பத்தின் பெயரில் மாற்றி விட்டதாக நடிகை கெளதமி போலீஸில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.




கிட்டத்தட்ட ரூ. 25 கோடி அளவிலான சொத்துக்களை அழகப்பன் குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக கெளதமி குற்றம்  சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 2 புகார்களை கொடுத்துள்ளார் கெளதமி. அவர் கொடுத்த புகார்களின் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி அழகப்பன் குடும்பத்தினர் மனு செய்து அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம்.


சென்னை, ராமநாதபுரம் என பல்வேறு ஊர்களில் கெளதமி இந்த மோசடி தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. தற்போது கெளதமியின் தொடர் புகார்கள், வழக்குகள் காரணமாக சி. அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ் குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகின்றனர்.