நடிகை கெளதமி சொத்துக்களை அபகரித்த வழக்கு.. அழகப்பன் குடும்பம் கேரளாவில் சிக்கியது!

Su.tha Arivalagan
Dec 21, 2023,07:14 PM IST


சென்னை: நடிகை கெளதமியின் சொத்துக்களை பவர் ஆப் அட்டர்னி பத்திரத்தை பயன்படுத்தி மோசடியாக அபகரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரையும் தமிழ்நாடு தனிப்படை போலீஸார், கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து கைது செய்துள்ளனர்.


நடிகை கெளதமிக்குச் சொந்தமான சொத்துக்களை பவர் ஆப் அட்டர்னி பத்திரங்களைப் பயன்படுத்தி மோசடியாக அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்து விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது பாஜகவில் இருந்து வந்த நடிகை கெளதமி, அழகப்பன் குறித்து கட்சித் தலைவர்களிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது.


ஆனால் கட்சியில் அழகப்பன் செல்வாக்கு அதிகம் இருந்ததால் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கெளதமி. இதையடுத்து அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.




கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீடு, சென்னை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தைத்  தொடர்ந்து அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தீவிரமாக போலீஸார் தேடி வந்த நிலையில் திருச்சூரில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.


இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேரும் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் தமிழ்நாட்டுக்கு அவர்கள் கொண்டு வரப்படவுள்ளனர்.