மதுரையில்.. நடனமாடிக் கொண்டே.. தேர்தல் பிரச்சாரம் செய்த.. நடிகை காயத்ரி ரகுராம்!

Manjula Devi
Apr 06, 2024,11:32 AM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மக்களைக் கவரும் வகையில் ,நடிகை காயத்ரி ரகுராம் நடனமாடிக் கொண்டே வாக்கு சேகரித்துக் கலக்கினார். 


லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில் மிகப்பெரிய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டாளத்தை பிரச்சாரம் செய்ய தேர்தல் களத்தில் இறக்கி உள்ளனர். இதனை அடுத்து ஒவ்வொரு ஊரிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா, காயத்ரி ரகுராம், சிங்கமுத்து, வையாபுரி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க தளங்களில் ஒன்றாக திகழ்வது வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தின் நடுவில் தோட்டத்துடன் கூடிய நீராழி மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கே மிகவும் ரம்யமாக இருக்கும். இந்த தெப்பக்குளம் சமீப காலமாக மக்களின் பொழுதுபோக்கு தளமாக செயல்பட்டு வருகிறது. அதனால் இதனை சுற்றிலும்  குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காக்கள், விதவிதமான உணவு வகை கடைகள் பெருமளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனைக் கண்டு மகிழ தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செய்கின்றனர்.




தெப்பக்குளத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடத்தில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு நடிகை காயத்ரி ரகுராம் கை விரல்களை இரட்டை இலை சின்னம் போன்று வைத்து நடனமாடி கொண்டே பிரச்சாரம் செய்தார். பெண்களுடன் சேர்ந்து அவர் நடனமாடியதை பலரும் ரசித்துப் பார்த்தனர். பின்னர் தெப்பக்குளத்தை சுற்றி உள்ள கடைகளுக்கு சென்று அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளை வழங்கி தீவிரமான வாக்கு சேகரிப்பில் இறங்கினார். இவரைக் காண இங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.