நடிகை கெளதமியின் சொத்து பறிப்பு வழக்கு.. அழகப்பனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Meenakshi
Dec 27, 2023,05:52 PM IST

சென்னை: நடிகை கெளதமியின் சொத்துக்களை மோசடியாக பறித்த வழக்கில் கைதான அழகப்பனை 3 நாள் போலீஸ் காவலில்  விசாரிக்க அனுமதி அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நடிகை கௌதமி கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை  அளித்திருந்தார். அதில் அழகப்பன் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்துள்ளதாக  கூறியிருந்தார். 2004 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கபட்ட காரணத்தினால் தான் உடல் ரீதியாகவும், மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அந்நேரத்தில், சொத்துக்களை அழகப்பனிடம் விற்கச் சொல்லி கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.


தன் உடல்நிலை காரணமாக மகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் பல்வேறு வேலைகளை செய்ய முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக  பாஜகவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் கெளதமி.




ஸ்ரீபெரும்புதூர் உள்ள சொத்துக்கள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அழகப்பன் பவர் ஏஜெண்டாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொண்டு அழகப்பன் தன்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாடகம் மாடி சொத்துக்களை அபகரித்தாக கூறியுள்ளார். சொத்துக்களை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடந்ததாகவும் கூறியுள்ளார். தன்னிடம் மோசடி செய்து அபகரித்த சொத்துக்களை மீட்டு தருமாறும், கொலை மிரட்டல் விடுக்கும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவு அதிகாரிகள் நடிகை கௌதமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். கெளதமியின் புகாரின் பேரில் அழகப்பன் உள்ளிட்ட 5 பேரை  போலீஸார் சமீபத்தில் கேரளாவில் வைத்துக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த நிலையில் அழகப்பனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், 3 நாட்கள் அவருக்கு போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.