பபீதா மகளா இது.. மசாலா கலப்பில்லாத செம்மையான காதல் கதையில்.. "ட்ரீம் கேர்ள்"

Su.tha Arivalagan
Nov 17, 2023,12:42 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: நடிகை ஹரிஷ்மிதா மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. காரணம் இல்லாமலா.. வெள்ளித்திரைக்கு வந்த இன்னும் ஒரு விஐபி வாரிசு இவர் என்பதால்தான் அது.


டபுள் மடங்குக்கு காரணம்.. ஒன்று இவர் மறைந்த ஸ்ட்ண்ட் நடிகர் ஜஸ்டினின் பேத்தி.. 2வது காரணம், நடிகை பபிதாவின் மகள். மறைந்த ஜஸ்டினை எம்ஜிஆர் படங்களில் தவறாமல் பார்க்கலாம். எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையிலும் கூடவே பாடிகார்டு போல இருந்தவரும் கூட. அந்தக் காலத்து ஸ்டண்ட் நடிகர்களில் பிரபலமானவரும் கூட.




ஜஸ்டினின் மகள்தான் பபிதா. அவர் கவர்ச்சி நடிகையாக, வில்லியாக பல்வேறு கேரக்டர்களில் ஒருகாலத்தில் கலக்கியவர். இவரது மகள்தான் ஹரிஷ்மிதா என்பதால் இவரும் அம்மா வழியில் அசத்துவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ட்ரீம் கேர்ள் படம் மூலமாக அறிமுகமாகிறார் ஹரிஷ்மிதா. இப்படத்தை இயக்கியிருப்பவர் எம்.ஆர். பாரதி. ட்ரீம் கேர்ள் திரைப்படம் மசாலா கலப்பில்லாத முழுமையான காதல் கதை. இதில் திறமைசாலிகளை மட்டுமே தேடினேன்.. தயாரிப்பாளரை தேடவில்லை.. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் 20 நாட்களிலேயே முடிந்தது என கூறி இருக்கிறார் பாரதி.




பாலு மகேந்திராவின்  அழியாத கோலங்கள் என்ற கிளாசிக் திரைப்படத்தை, அவரின் ஞாபகமாக 2019 ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் 2 என்ற பெயரில்  மீண்டும் எழுதி இயக்கியவர்தான் எம்.ஆர்.பாரதி. இப்படம் 3 கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காதல் கதை. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ட்ரீம் கேர்ள் படத்தை இயக்கியுள்ளார்.


சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் ட்ரீம் கேர்ள் என்ற படத்தை எழுதி இயக்கி உள்ளார். இதுவும் காதலை மையமாகக் கொண்ட திரைப்படம். இப்படத்திற்கு சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு செய்ய ,இளமாறன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜீவா கதாநாயகனாகவும் ,  ஹரிஷ்மிதா நாயகியாகவும் நடித்துள்ளார். பிரபு, சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். 


ட்ரீம் கேர்ள் படம் அழுத்தமான காதல் கதை என்பதால், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.




இப்படம் பற்றி இயக்குநர் எம்.  ஆர்.பாரதி கூறுகையில், இது ஒரு காதல் கதை. கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.

இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் மகிழ்ச்சியின் சொட்டுகளை வீணடிக்காமல் ரசிப்பவர்கள்.


நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு  கனவும் வருகிறது. அது சில மாயங்களைச் செய்கிறது.அதன்  வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் 'ட்ரீம் கேர்ள்' படம்.




இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை. படத்தில் வில்லனே கிடையாது. வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம். கதையிலும் குளிர்ச்சி இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது. 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட படம்.


'சில்ட்ரன் ஆப் ஹெவன்' மிகக்குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம். ஆறு - ஏழு லட்சத்தில் முடிந்த படம். பெரிய படமான 'ப்ரேவ் ஹார்ட் 'கூட 80 கால்ஷீட்டில் முடிக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியாது அல்லவா? இன்று வருகிற மிகச் சாதாரண படங்களுக்குக் கூட  60 நாட்கள் 70  நாட்கள் என்று படப்பிடிப்பு நடைபெறுகின்றன. ஒரு கோடி இரண்டு கோடி என்று செலவு செய்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு சரியான திட்டமிடல் இல்லாதது, சினிமாவைப் புரிந்து கொள்ளாதது , தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரியாதது போன்றவைதான் இதற்கெல்லாம் காரணம்.


சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுக்க முடியும் . ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள். சில லட்சங்கள் என்றால் ஒரு தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால் கோடி ரூபாய் இழப்பு என்றால் அவர் எப்படித் தாங்க முடியும்? இப்படிப்பட்ட திட்டமிடாத சிலரால் தான் சினிமா நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.


வணிக மதிப்புள்ள  கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்வதைக் குறை சொல்ல முடியாது. எப்படியாவது வியாபாரம் ஆகிவிடும். சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் இப்படியான சிறு முதலீட்டுப் படங்களுக்கு லட்சங்களைத் தாண்டினால் தயாரிப்பாளரால் இழப்பைத் தாங்க முடியாது.


இதைத் தடுப்பதற்கு சரியாகத் திட்டமிட்டு நன்றாக நடிக்கத் தெரிந்த புதுமுகங்களை வைத்து எடுத்தால் அந்தப் படம் நிச்சயமாக கவனிக்கப்படும். அதிக திரையரங்களில் வெளியிடாமல் குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல படம் என்று பெயர் பெற்றால் போதும். அந்தப் படம் தப்பித்து விடும். வெளியான  முதல் காட்சி - அந்த ஒரு காட்சியே படத்தின் தலைவிதியைச் சொல்லிவிடும். இப்போது படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் போதும். செய்தி தீ போல பரவிவிடும். ஒரு காட்சியை வைத்தே அதன் தலைவிதி தெரிந்து விடும்.


அந்த நம்பிக்கையில் தான் நான் இந்தப் படத்தை சில லட்சங்களில் எடுத்து இருக்கிறேன். ஏழு லட்ச ரூபாயுடன் ஊட்டிக்குச் சென்றேன். ஒருநாளும் படப்பிடிப்பு தடைபட்டதில்லை. நண்பர்கள் உதவினார்கள். இயற்கை உதவியது. பனியும் மழையும் நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் வந்து உதவி செய்தன. சரியாகத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடக்கும் இயற்கை நிலைகளைத் தேர்வு செய்தோம். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்து நேரத்தை வீணடிக்கவில்லை. எல்லாமே சுமுகமாக நடந்தது என்றார்.


சூப்பர்.. நிச்சயம் பாராட்டலாம் பாரதியை.. படத்தைப்  பார்த்து விட்ட மிச்சப் பாராட்டையும் தெரிவிப்போம்.