ஜமா படம்.. எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை தந்தது.. நடிகை அம்மு அபிராமி நெகிழ்ச்சி!

Manjula Devi
Jul 27, 2024,03:04 PM IST

சென்னை:   ஜமா படம் எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை தந்து, ஒரு நடிகையாக என் முழு திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படம் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. இதனைத் தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் இவர் பிரபலமானார். இதனை தொடர்ந்து அம்மு அபிராமி என்று ரசிகர்கள் இவரை செல்லமாக அழைத்து வருகின்றனர். 


இது மட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படமும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதன் பின்னர் நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கை கூறிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவர் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றும் வருகிறார்.




அந்த வகையில் தற்போது பாரி இளவழகன் இயக்கத்தில் ஒரு நம்பிக்கைகுரிய கதாபாத்திரத்தில் ஜமா படத்தில் நடித்திருக்கிறார் நடிகை அம்மு அபிராமி. இவருடன் இப்படத்தில் பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ். சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே இளவழகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். 


எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜமா படம் வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியாக உள்ளது.


இப்படம் குறித்து நடிகை அம்மு அபிராமி கூறும்போது,  எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 


ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது, இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு அது ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் மூலம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார்.