கோட் படம் வருது.. கட்சி மாநாடு வரப் போகுது.. சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டார் விஜய்!

Meenakshi
Aug 30, 2024,03:14 PM IST

சென்னை: தி கோட் படம் ரிலீஸ்  மற்றும் தவெக கட்சியின் முதல் மாநாடு ஆகியவை நடைபெற இருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோயிலுக்கு புறப்பட்டுள்ளார் விஜய். எல்லோரும் வழக்கமாக திருப்பதிக்குப் போவார்கள். விஜய் வித்தியாசமாக சாய்பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார்.

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் நடித்து முடிந்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.



இப்படத்தின் படப்பிடிப்பின் போது  தான் நடிகர் விஜய் அரசிலுக்கு  வருவதை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை விஜய்  அறிவித்தார். அதன் பின்னர் கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். அதற்கு பல எதிர்ப்புகளும், பல ஆதரவுகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கட்சி மாநாடு நடத்துவதிலும் பல சிக்கல்களை சந்தித்து வந்தார் விஜய். இதனைத் தொடர்ந்து விஜய் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது.

தி கோட் படம் ரிலீஸ் மற்றும் விஜய் கட்சியின் முதல்  மாநாடு ஆகிய 2ம் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், நடிகர் விஜய் இன்று தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு புறப்பட்டுள்ளார். விஜய்யின் ஆன்மீக பயணத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த நடித்த படம் வெளிவருவதற்கு முன்னர் இமயமலைக்கு செல்வது போல, தற்போது விஜய் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்