நடிகர் விவேக் மகளுக்கு சென்னையில் திருமணம்.. தந்தையின் நினைவாக அவர் செய்த சூப்பர் செயல்!

Meenakshi
Mar 28, 2024,02:08 PM IST

சென்னை:  நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாவது மகள் தேஜஸ்வினிக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொண்ட  விருந்தினர்களுக்கு தந்தையின் நினைவாக மரக்கன்றுகளை வழங்கி அசத்தினார் தேஜஸ்வினி.


தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறு நாளே மாரடைப்பால் காலமானார்.  இவரது நகைச்சுவைகளில் சமூக சீர்திருத்த கருத்துக்கள் அதிகம் இருக்கும். தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்ததுடன் மக்களை சிந்திக்கவும் வைத்தவர். இவருக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இவர் ரசிகர்களால் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார்.




விவேக்கிற்கு அருள் செல்வி என்ற மனைவியும், அமிர்த நந்தினி, தேஜஸ்வினி என்ற 2 மகள்களும், பிரசன்ன குமார் என்ற மகனும் இருந்தார். கடந்த 2015ம் ஆண்டு டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சல் காரணமாக மகன் உயிரிழந்து விட்டார். விவேக்கின் மூத்த மகள் அமிர்த நந்தினிக்கு முன்னரே திருமணம் முடிந்த நிலையில்,  2வது மகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. தேஜஸ்வினி -பிரபு திருமணம் சென்னையில் உள்ள விவேக் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. 




திருமணத்திற்கு பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் வழங்கப்பட்டது. நடிகர் விவேக் க்ரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை கனவாக வைத்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.