இதுபோன்ற சோதனை காலங்களில்.. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.. விஷ்ணு விஷால் நன்றி!

Su.tha Arivalagan
Dec 05, 2023,04:58 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலின் காரணமாக காரப்பாக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நடிகர் விஷ்ணு விஷாலை மீட்பு படையினர் மீட்டனர். இதற்காக நடிகர் விஷ்ணு விஷால் தனது நன்றியை தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


சென்னையில் நடிகர் முதல் ஏழை மக்கள் வரையில் அனைவரும் புயலால் பாதிக்கப்பட்டனர். இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.


சென்னை முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு தனித்தீவு போல் காட்சியளித்தது. தற்போது படிப்படியாக நீர் குறைந்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வடியாமலும், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இன்று காலை காரப்பாக்கத்தில் தனது வீட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக ட்விட் போட்டிருந்தார்.




இதுகுறித்து அவர் போட்டிருந்த டிவீட்டில், காரப்பாக்கத்தில் என் வீட்டிற்குள் தண்ணீர் நுழைகிறது. காரப்பாக்கத்தில் தண்ணீரின் மட்டம் உயர்ந்து வருகிறது. நான் உதவிக்கு அழைத்தேன். மின்சாரம் இல்லை. wi-fi இல்லை .ஃபோன் சிக்னல் இல்லை. மொட்டை மாடியில் மட்டுமே குறிப்பிட்ட இடத்தில் எனக்கு சிக்னல் கிடைக்கும். சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக உணருங்கள். வலிமையாக இருங்கள் என பதிவிட்டு இருந்தார்.


இதைப் பார்த்த தமிழக அரசின் மீட்புப் படையினர் விரைந்து சென்று விஷ்ணு விஷாலை மீட்டனர். இதற்காக நடிகர் விஷ்ணு விஷால் சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே மூன்று படகுகள் செயல்படுவதை பார்த்தேன். இது போன்ற சோதனை காலங்களில் தமிழக அரசு செயல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.