விஜய் வந்தாச்சு.. அடுத்து இன்னொரு "வி"யும் அரசியலில் குதிக்கப் போறாராமே.. யார் தெரியுமா?

Manjula Devi
Feb 06, 2024,06:36 PM IST

சென்னை: தேர்தல் சமயத்தில் அடுத்தடுத்து பல புதிய கட்சிகள் பிறப்பது வழக்கம். சமீபத்தில்தான் நடிகர் விஜய் தனது புதிய கட்சியைத் தொடங்கினார். இந்த நிலையில் இன்னொரு நடிகரும் கட்சி தொடங்கப் போவதாக பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.


நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியை தொடர்ந்து நடிகர் விஷாலும் இப்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது.  நடிகர் விஜய் போலவே விஷால் தனது நடிகர் மன்றத்தை "விஷால் மக்கள் நல இயக்கம்" என மாற்றம் செய்துள்ளார். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளரை நியமித்து உள்ளார். விரைவில் புதிய கட்சியை ஆரம்பித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




நடிகர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை புதிய கட்சியை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிடப்பட்டது. இதற்கு மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் வாழ்த்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 


இதனை அடுத்து முதல் முதலாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக விஜய், புதுச்சேரியில் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து மக்களையும், ரசிகர்களையும் கடந்த இரண்டு தினங்களாக  சந்தித்து வருகிறார். செல்பி எடுத்து அவர்களை மகிழ்விக்கிறார். ரசிகர்கள், பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு மாலை அணிவித்து  பெரும் வரவேற்பு அளித்தனர்.


இந்நிலையில் நடிகர் விஷால் புதிய கட்சியை தொடங்க தயாராகி வருகிறார்.  சில வருடங்களுக்கு முன்பு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தினார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவும் விரும்பி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு தள்ளுபடி ஆகிவிட்டது.  பின்னர் பின்வாங்கி விட்டார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 


ஆனால் சமீப காலமாக அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் விஷால். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேவை செய்தும், நிவாரணம் அளித்தும் வந்தார். போகும் இடமெல்லாம் ஏதாவது செய்து அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். தற்போது தன்னுடைய ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என பெயர் மாற்றம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளார்.  பூத் ஏஜெண்டுகளை உருவாக்கினார். இது மட்டுமல்லாமல் தான் நடிக்கும் படங்களின் படிப்பிடிப்பு தளத்தில் உள்ள ரசிகர்களை நேரில் சென்று சந்தித்தும், அவர்களிடம் உள்ள கோரிக்கைகளை கேட்டு,அதனை நிறைவேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. 


நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஷால் புதிய கட்சியை விரைவில் தொடங்குவார் என்று சொல்வார்கள். இதனை விரைவில் பதிவு செய்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.