"செந்தூரப்பாண்டி" நாயகனுக்கு.. கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய்

Su.tha Arivalagan
Dec 28, 2023,10:40 PM IST

சென்னை: செந்தூரப்பாண்டி மூலம் தனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த  கேப்டன் விஜயகாந்த்துக்கு, நடிகர் விஜய் இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.


நடிகர் விஜயகாந்த்துக்கும், விஜய்க்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளது. தனக்கு உயர்வு கொடுத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பது ஒரு முக்கியக் காரணம் என்றாலும் கூட விஜய் மீது தனிப்பாசம் கொண்டவர் விஜயகாந்த்.


அவரது சில படங்களில் சிறுவனாக நடித்துள்ளார் விஜய். அதன் பிறகு அவர் ஹீரோவான பின்னர் அவருக்கென்று ஒரு ஸ்டார் வேல்யூ கிடைக்க விஜயகாந்த்தான் காரணம். விஜய்க்காக, அவருடைய செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படத்தில்தான் விஜய்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. பலரும் அவரைக் கவனிக்க ஆரம்பித்தனர்.




இந்த நன்றி விசுவாசம் விஜய்யிடமிருந்து இதுவரை போகவில்லை. விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் விஜய். இந்த நிலையில் இன்று இரவு விஜய், விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்தார். பலத்த கூட்ட நெரிசலுக்கு மத்தியில் மிகுந்த சிரமப்பட்டு வந்து சேர்ந்தார் விஜய்.


கலங்கிப் போயிருந்த கண்களுடன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வணங்கினார் விஜய். பின்னர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினார் விஜய். அவரிடம் கண் கலங்கியபடி தோளைப் பிடித்துக் கொண்டு பேசினார் பிரேமலதா விஜயகாந்த். பின்னர் விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார் விஜய்.