10, +2 மாணவர்களுக்கு.. பரிசளித்து கெளரவிக்க.. 2 கட்டங்களாக சென்னையில் விழா.. நடிகர் விஜய் அறிவிப்பு!

Manjula Devi
Jun 10, 2024,05:31 PM IST

சென்னை: கடந்த ஆண்டு பரிசளிப்பு விழாவில் மாணவிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், இதனை தவிர்க்க ஜூன் 28 மற்றும் ஜூலை மூன்றாம் தேதி என இரண்டு கட்டங்களாக 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறும் என தமிழக வெற்றிக் கழக  தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.


தமிழ் சினிமா வரலாற்றில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் டாப் இடத்தைப் பிடித்து இருக்கும் உச்ச நடிகர் விஜய் தற்போது அரசியலில் நுழைந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இக்கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது.


இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அக்கட்சி உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். கடந்த 2023 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி கௌரவித்தார். இந்த விழா சென்னை ஆர்கே கன்வென்ஷன் ஹாலில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 




இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் தனக்கே ஏற்ற பாணியில் குட்டி ஸ்டோரியுடன் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்தார். இதனை தொடர்ந்து மாற்று திறனாளிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையை வழங்கினார். இதில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு உணவுகள் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 


இந்த  நிகழ்ச்சி மாலையுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விழா முடிய தாமதமானது. இதனால் மாணவிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் மாணவிகளும் பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  விஜய்யும் கூட நீண்ட நேரமாக நின்றபடியே பரிசுகளை வழங்கியதால் அவரும் கூட களைப்படைய நேரிட்டது.


இந்த நிலையில் 2024 ஆம் கல்வியாண்டிலும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டில் மாணவிகள் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு பரிசு வழங்கும் விழாவை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 


முதல் கட்ட பரிசு வழங்கும் விழா வரும் ஜூன் 28ஆம் தேதி 21 மாவட்ட மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக ஜூன் மூன்றாம் தேதி 19 மாவட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக்கழக வெளியிட்டுள்ளது. அதில்


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தமிழக கட்சி கழகம் சார்பாக பாராட்ட உள்ளார். 


முதற்கட்டமாக 28/6/2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர்,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டுப் பெறுகிறார்கள். 


அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  3/7/2024 புதன் கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டை பெறுகிறார்கள். 


மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றுகளும் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் விஜய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.