கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்..நடிகர் விஜய் குற்றச்சாட்டு

Manjula Devi
Jun 20, 2024,11:31 AM IST

சென்னை:  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் தெரிவித்ததுடன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே என கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். 




இந்த நிலையில்  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துடன், இதற்குக் காரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.


கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனி மேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.