எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன்.. நீங்களும் பண்ணிடுங்க: விஜய்

Meenakshi
Apr 19, 2024,05:22 PM IST

சென்னை: நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று த.வெ.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜய்  தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது போலவே இந்தாண்டும் ஓட்டுப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமாகிய நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். 




கடந்த முறை விஜய் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார்.  அவர் சைக்கிளில் வந்ததற்கு பல விதமான காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று எப்படி வந்து வாக்கு போடுவார், என்ன கலர் சட்டை அணிந்து வருவார் என்ற எதிர் பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு நாட்களாகவே  பேசு பொருளாகியிருந்தது.


அதுவும் அவர் கட்சி ஆரம்பித்த பிறகு, நடை பெறும் முதல் தேர்தல் என்பதால் அவரது தொண்டர்களும் மிகுந்த ஆர்வத்துடன் விஜய் வீட்டின் முன்பே பல மணி நேரம் காத்திருந்தனர். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் இருந்த விஜய் இன்று காலையில் தான் வாக்களிப்பதற்காக இந்தியா வந்துள்ளார்.


அதன் பின்னர் வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக காரில் வந்தார். இந்த முறை எந்த அரசியல் குறியீடும் இல்லாமல் வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்களித்தார். விஜய்யின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டனர். விஜய் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால் காவலர்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அனைவரும் வாக்கு அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று  தெரிவித்துள்ளார்.