கேரளாவைத் தாக்கிய விஜய் புயல்.. அதிர்ந்த விமான நிலையம்.. ரசிகர்கள் வேற லெவல் வெயிட்டிங் !

Meenakshi
Mar 18, 2024,07:19 PM IST
திருவனந்தபுரம்: தி கோட் படத்தின் இறுதி கட்டப் படப் பிடிப்புக்காக கேரளாவுக்கு வந்துள்ளார் நடிகர் விஜய். விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தன் மீது உயிரையே வைத்துள்ள ரசிகர்களை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார் விஜய்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தி கோட் படத்தின் இறுதிக்காட்ட படப்பிடிப்பிற்காக கேரளா வந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இதற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வர உள்ளதால், அடுத்து முழு நேரம் அரசியலில் செயல்பட உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். 

இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  வெங்கட்பிரபு, விஜய் இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடிக்கிறார். 




பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட உள்ளது. அதற்காக விஜய் இன்று கேரளா வந்தா். அவர் வருகையை முன்னிட்டு கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் உற்சாக அடைந்து விமான நிலையத்தில் குவிந்தனர். விஜய்க்கு ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். பிரமாண்ட வரவேற்பாக இது இருந்துள்ளது.

கடைசியாக காவலன் படத்திற்காகத்தான் கேரளா வந்திருந்தார் விஜய். அதன் பிறகு அவரது படங்களின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெறவில்லை. இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கேரளா  வந்துள்ளார் நடிகர் விஜய். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் நடிக்கும் காட்சிகள்  இரவு நேரங்களில் நடத்தப்படும் என்று தெரிகிறது. 

படப்பிடிப்பு முடிந்த பிறகு திருவனந்தபுரத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் விஜய். தமிழ்நாட்டை போல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால், இச்செய்தியால் கேரள ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.