இந்த தேர்தலில் விஜய் வெறும் வாக்காளர்.. அடுத்த தேர்தலில் வெற்றி வேட்பாளர்.. செம குஷியில் ரசிகர்கள்!

Manjula Devi
Apr 19, 2024,04:25 PM IST

சென்னை: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு, முதல் முதலாக இன்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்களித்தார். அதேசமயம், ஒரு நடிகராக அவர் போட்டுள்ள கடைசி ஓட்டும் இதுதான். அடுத்து 2026 சட்டசபைத் தேர்தலில் அவர் அரசியல் தலைவராக தேர்தல் களத்தில் நிற்கப் போகிறார்.. அவருக்காக ஓட்டுப் போடும் மக்களை எதிர்நோக்கி காத்திருக்கப் போகிறார்.


இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும், சுவாரஸ்யத்தையும் தூண்டி விட்டுள்ளது. 


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் பெயரிட்டார். இதற்கு ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் மிகப்பெரிய வரவேற்பு எழுந்தது. 2026 ஆம் ஆண்டு வரும் சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு. அப்போது நான் போட்டியிடுவேன். அதுவரை தான் கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் இறங்க உள்ளேன் என அறிவித்திருந்தார்.




இதனால் ரசிகர்கள் ஒருபுறம் சோகமாகவும், மறுபுறம் அரசியலில் விஜய் வருவதற்கு வரவேற்பு கொடுத்து சந்தோஷத்தையும் பகிர்ந்து வந்தனர். ஒரு பக்கம் அவர் நடிப்பில் மும்முரமாக இருக்க, மறுபக்கம் கட்சியின் உட் கட்டமைப்பு தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.


தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும்  கோட் படத்தில் நடிகர் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் பாடலும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 


நடிகர் விஜய்க்கு ஆரம்பத்திலிருந்து அரசியலில் ஆர்வம் அதிகம் .அதனால் இவர் நடிக்கும் படங்களில் எப்போதுமே அரசியல் சம்பந்தப்பட்ட டயலாக் இருக்கும். இந்த  வசனங்கள் மூலம் இன்றளவு கோடான கோடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். மேலம் நான் அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் பகிரங்கமாக சொல்லியிருந்தார். இந்த நிலையில் இன்று இன்று வாக்குப்பதிவு நாள். ஜனநாயக கடமையை முறையாக செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வில் ரஷ்யாவிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் சென்னை நீலாங்கரைக்குச் சென்று அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.


விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முதலாக இந்த தேர்தலில் வாக்கு அளித்துள்ளார். அடுத்து வரப்போகிற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய் தன்னுடைய கட்சிக்காக மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறார்.. ஏன் அவரும் கூட தேர்தலில் போட்டியிடப் போகிறார்.. அவரது கட்சியும் அந்தத் தேர்தலில் பரபரப்பான ஒரு சக்தியாக இடம் பெறப் போகிறது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளது.  அடுத்த தேர்தல் எங்க தேர்தல்.. எங்க ஆட்சி வரப் போகுது என்று இப்போதே ரசிகர்கள் தடபுடலாக கூறி வருகின்றனர்.