"தேங்க்ஸ் தலைவா".. மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்துக்கு.. போன் போட்டு நன்றி சொன்ன விஜய்!

Meenakshi
Feb 07, 2024,05:41 PM IST

சென்னை: புதுக்கட்சி ஆரம்பித்ததற்காக, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவரை போனில் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார் விஜய்.


நடிகர் விஜய் 2009ம் ஆண்டு நற்பணி மற்றும் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் படங்களில் பிசியாக நடித்து வந்தார். 2021 ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தின் முதல் பயணத்தைத் தொடங்கினார் விஜய்.


அதன் பிறகு அவரது இயக்கம் சார்பில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். போட்டியிட்ட 169 வேட்பாளர்களில் 129 பேர் வெற்றி பெற்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஷாக் கொடுத்தனர். 2022 ல் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய்யின் பிரச்சாரம் இல்லாமலேயே 10க்கும் மேற்பட்ட இடங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் கைப்பற்றினர். 




சமீப காலமாகவே பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார் விஜய். விஜய்யின் அரசியல் பயணம் எப்போது எப்போது என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரை அறிமுகப்படுத்தி, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். 


விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்கள் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு நடிகர் ரஜினிகாந்திடம் கருத்து கேட்டதற்கு, வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.


இதனால் மகிழ்ச்சியான விஜய் தற்போது ரஜினிகாந்த்துக்கு நன்றி கூறியுள்ளார். இன்று ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார். இவர்களின் உரையாடல் சில நிமிடம் நிகழ்ந்ததாகவும், ரஜினி சில அரசியல் குறித்து அறிவுரை வழங்கியதாகவும் தகவல் பரவி வருகின்றன.


சமீப காலமாகவே ரஜினிகாந்த்  - விஜய் ரசிகர்களிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இருவரின் படமும் வரும் போதெல்லாம் இந்த சண்டை உக்கிரமாகும். இந்த நிலையில்தான் ஜெயிலர் படவிழாவின்போது காக்கா கழுகு கதையை ரஜினி சொல்லப் போக விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். விஜய்யும், லியோ பட விழாவில் அதுதொடர்பாக ஒரு கருத்தைக் கூறப் போக ரஜினி ரசிகர்கள் கொதித்தனர். இந்த சண்டைக்கு ரஜினியே லால் சலாம் விழாவில் முற்றுப் புள்ளி வைத்தார். விஜய்யையும் வாழ்த்தி விட்டார். இதனால் விஜய்யும் கூலாகி விட்டார். இனியாவது இந்த ரசிகர்களின் சண்டை முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


முதலில் ரஜினிகாந்த்தான் அரசியலுக்கு வருவதாக இருந்தது. அவரும் போர் வரட்டும்.. வரும்போது உறுதியாக போட்டியிடுவோம் என்று கூறி வந்தார். ஆனால் கொரோனாதான் வந்தது. இதனால் அவரது அரசியல் பயணம் பாதியிலேயே நின்று போய் விட்டது. இந்த நிலையில் சத்தம் போடாமல் விஜய் வந்து விட்டார். இவரது அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்யின் பயணம் எப்படி இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.