வெள்ளைச் சட்டையில் விஜய்.. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது தவெக பரிசளிப்பு விழா

Manjula Devi
Jun 28, 2024,11:55 AM IST

சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கு தற்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது. விஜய் வெள்ளைச் சட்டையில் படு ஸ்மார்ட்டான லுக்கில் காணப்படுகிறார்.


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதன் பின்னர் கட்சி நிர்வாகிகள், இக்கட்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி கடந்த வருடம் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு நடிகர் விஜய் சிறப்பு பரிசுகளை வழங்கினார். 


அப்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 600 எடுத்த  மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்தார். இது தவிர மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை அளித்தார்.




இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை  நடந்து முடிந்தது. அதேபோல் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த 10 மற்றும்  12ஆம் வகுப்பு தேர்வுக்கான ரிசல்ட் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.


மேலும் கடந்த வருடம் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இந்த வருடம் இரண்டு கட்டங்களாக விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி முதற்கட்டமாக இன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி ,திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் ,சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. 


இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட  விருது வழங்கும் விழா செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களுக்கு   ஜூலை 3 ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.


இந்த வருடம் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் ஹாலில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற  மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்க இருக்கிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்க உள்ளார்.




விழாவில் பங்கேற்பதற்காக அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வந்து விட்டார் விஜய். கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் விழாவுக்கு வந்தார் விஜய். வெள்ளைச் சட்டையில் அரசியல் தலைவர் லுக்கில் படு ஸ்மார்ட்டாக காணப்பட்டார் விஜய். ஏற்கனவே வந்திருந்த மாணவ மாணவியரும் பெற்றோர்களும் அவரை கரவொலி எழுப்பியும் உற்சாகத்துடனும் வரவேற்றனர். பின்னர் முதல் வரிசையில் மாணவர்களுடன் அமர்ந்து விழாவில் பங்கேற்றார் விஜய். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.


கல்யாண விருந்து போல சூப்பர் சாப்பாடு


இந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது வருட கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தடபுடலான கல்யாண விருந்துக்கே  டஃப் கொடுக்கும் வகையில் மதிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான மிக நீண்ட பட்டியல் வெளியாகி உள்ளது. அந்தப் பட்டியல் இதுதான்..


சாதத்திற்கு- கதம்ப சாம்பார், வத்தக் குழம்பு, தக்காளி ரசம், மோர் 


கூட்டு வகைகள்- உருளை காரக்கறி, ஆனியன் மணிலா, அவியல், இஞ்சி துவையல், தயிர் பச்சடி


இதனுடன் அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம், மலாய் சாண்ட்விச் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.