வையாபுரி வீட்டில் வைத்த கொலு.. பாடுனாதான் சுண்டல் .. கலகலப்புடன் பெருக்கெடுத்து ஓடிய இசை வெள்ளம்!

Su.tha Arivalagan
Oct 11, 2024,12:09 PM IST

சென்னை: நகைச்சுவை நடிகர் வையாபுரி வீட்டில் வைத்த இந்த வருட நவராத்திரி கொலுவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வருகை தந்து பாட்டெல்லாம் பாடி அசத்தியுள்ளனர். 


தமிழ்த் திரையுலகில் மிகவும் நீட்டான ஒரு நடிகராக அறியப்படுபவர் வையாபுரி. எதார்த்தமான மனிதர். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் மிக்கவர். தேவையில்லாமல் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவரும் கூட.



வழக்கமாக அவரது வீட்டில் நவராத்திரியையொட்டி கொலு வைப்பார்கள். இந்த வருடமும் அப்படி கொலு வைத்திருந்தனர். இந்த முறைய நிறைய விஐபிக்களையும் அவர் அழைத்திருந்தார். அதில் பாடகர் வீரமணி ராஜுவும் ஒருவர். இவர் ஐயப்பன் பாடல்களுக்குப் பெயர் போனவர். கேரள மாநில அரசின் ஹரிவராசனம் விருதைப் பெற்றவர்.


வையாபுரி வீட்டுக்கு வந்திருந்த வீரமணி ராஜு, கொலுவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் தனது குரலில் பாடி பிரபலமான பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடலை பக்தி மணம் கமழ பாடி அனைவரையும் மகிழ்வித்தார். சும்மா சொல்லக் கூடாது.. அவரது பாடலால் கொலுவே மிகவும் பக்தி மயமாக மாறிப் போய் விட்டது.




இதேபோல நடிகர் சாம்ஸும் தனது குடும்பத்தோடு வருகை தந்து மகிழ்வித்தார். அவரையும் வையாபுரியின் மனைவி பாட்டுப் பாடச் சொன்னார். பாடினால்தான் சுண்டல் கிடைக்கும் என்று சொல்லவே, விடுவாரா சாம்ஸ்.. சூப்பராக பாட்டுப் பாடி அசத்தி விட்டார். நேர்த்தியான முறையில் அவர் பாடிய பக்திப் பாடல் அனைவரையும் கவர்ந்தது.


கொலு நிகழ்ச்சியில் நடிகர் பூவிலங்கு மோகனும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டு வையாபுரி குடும்பத்தாரை மகிழ்வித்தனர். நவராத்திரி விழாவின் 9வது நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்