"அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை.. பாஜக பூஜ்ஜியம் தான்".. எஸ் வி சேகர் தாக்கு

Su.tha Arivalagan
Sep 28, 2023,08:49 AM IST

சென்னை: அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் வரை இங்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


நடிகரும், தீவிர பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு  எஸ்.வி.சேகர் பதிலளிக்கையில், 




பாஜக கூட்டணியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அதிமுக வெளியேறி இருக்கிறது.  இதில் மத்தியில் உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். ஹாட்ரிக் முறையில் மூன்றாவது முறையாக பிரதமராக வெற்றி பெறுவது உறுதி. 


இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் உதவுவது கிடையாது. அண்ணாமலை அதிமுக கூட்டணி தலைவர்களை தவறுதலாக பேசியுள்ளார். அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் என்பதே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாட்டில் பாஜக தலைவராக நியமித்தது தவறு. அண்ணாமலையால் தான் இந்த கூட்டணி முறிந்தது. 


பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார். இவர் ஐபிஎஸ் படிக்காமல் இருந்திருக்கலாம். இந்த வாய்ப்பு திறமை வாய்ந்த வேறு யாருக்காவது உதவி இருக்கும். அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம் தான்.


தேர்தல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாக கொண்ட  ஒரு கூட்டணி. எண்ணிக்கை மட்டுமே போதும். ஆளுங்கட்சி மாநிலத்தில் செய்யக்கூடிய நன்மையே ஓட்டு வங்கியாக மாறும். இதனைத் தாண்டி நன்மை செய்து மக்களிடம் கொண்டு போக வேண்டும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பிரதமராக வருவார் என கூறியுள்ளார்.