வாக்காளர் பட்டியலில்.. பேரை காணோம்.. ஓட்டு போட முடியாமல் திரும்பிய நடிகர் சூரி!

Manjula Devi
Apr 19, 2024,05:57 PM IST

சென்னை: நடிகரும், காமெடி நடிகருமான சூரி, இன்று ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்த இடத்தில் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறியது மன வேதனையாக உள்ளது என்று சூரி கூறியுள்ளார். 


இது யாருடைய தவறு என்பது தெரியவில்லை. அடுத்த தேர்தலில் என்னுடைய ஓட்டை நான் செலுத்துவேன் என நம்புகிறேன் என மனவேதனையுடன் பேசி உள்ளார் நடிகர் சூரி.


இன்று நடிகர் நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டதாக பதிவிட்டு வருகின்றனர். 




இந்த நிலையில் நடிகர் சூரி இன்று தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்கு மையத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடிகர் சூரியின் பெயர் விடுபட்டதாக கூறியுள்ளனர். இது பற்றி நடிகர் சூரி வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,


என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தலிலும் என்னுடைய ஓட்டை பதிவு செய்து வருகிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்ல என்னுடைய பெயர் விடுபட்டுப்போச்சு என சொல்றாங்க. என் மனைவியின் பெயருக்கு ஓட்டு இருக்குது. என் பெயருக்கு இல்லை. என் பெயர் விடுபட்டுப் போச்சுன்னு சொல்றாங்க. இருந்தாலும் 100% ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இது எங்க யாருடைய தவறு என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டுப் போட்டுவிட்டு ஓட்டு போடவில்லை என சொல்வதை விட, ஓட்டு போட முடியவில்லை என்ற வேதனையுடன் சொல்கிறேன். தயவுசெய்து நூறு சதவீதம் ஓட்டு போடுங்க. ஓட்டு போடுவது ரொம்ப முக்கியம். நாட்டுக்கு நல்லது. தவறாமல் வாக்களியுங்கள். நான் அடுத்த தேர்தலில் என்னுடைய ஓட்டை செலுத்துவேன் என நம்புகிறேன் என மனவேதனையுடன் கூறியுள்ளார்.