"உலக நாயகனே".. கமல்ஹாசனை எப்படி வாழ்த்தியிருக்கார் பாருங்க.. நம்ம "மார்க்கண்டேயேன்"

Su.tha Arivalagan
Nov 06, 2023,06:34 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன்  பிறந்த நாளையொட்டி நடிகரும், மார்க்கண்டேயன் என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான சிவக்குமார் சூப்பரான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.


நவம்பர் 7ம் தேதி, அதாவது நாளை தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கமல்ஹாசன். அவருக்கு இப்போதே பிரபலங்கள் வாழ்த்து கூற ஆரம்பித்து விட்டனர். பழம்பெரும் நடிகரும், சிறந்த மேடைப் பேச்சாளரும், மார்க்கண்டேயன் என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடிகர் கமலஹாசன் சிவக்குமாரின் குடும்பத்துடன்  நெருங்கிய நட்பு பாராட்டி வருபவர். நடிகர் சிவகுமாரும் கமலஹாசனும்  இணைந்து 8 படங்கள் நடித்துள்ளனர். சிவக்குமாரின் பிள்ளைகளான நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் கமல்ஹாசனின் சிறந்த ரசிகர்களாக, சீடர்களாக இருக்கிறார்கள். சிவக்குமாரின் மருமகளான நடிகை ஜோதிகா கமல்ஹாசனுடன் இணைந்து தெனாலி படத்தில் நடித்துள்ளார்.




நடிகர் சிவகுமார் அக்டோபர் 23ஆம் தேதி அன்று தனது 82 வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளில்  வாழ்த்து தெரிவித்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் அண்ணன் சிவக்குமார். அவர் பிறந்த நாளில் நான் மகிழ்வோடு வாழ்த்துகிறேன் . நீடு வாழ்க...!! என பதிவிட்டிருந்தார்.


தற்போது கமல்ஹாசனுக்கு சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவக்குமாரின் வாழ்த்துச் செய்தி:


நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான்.


அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறு யாரும் செய்ய முடியவில்லை.


சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார்.


கமல், நீங்கள்  நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்..


'டூப்' போடாமல் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள்  சிங்கத்தோடு மோதியவர் ..


'மீண்டும் ஒரு சூர்யோதயம்' -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.


1973-ல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் என்று துவங்கி தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள்- என  8 படங்களில் நாம்  இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள்..


வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல் !. 


விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல உங்களுக்குள் இருந்த 'பொறி'யை கண்டவன் நான்.


அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி 'நாயகன்','குணா', 'அன்பே சிவம்', 'ஒளவை சண்முகி', 'ஹேராம் ' என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது.


நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது.


அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார். 


அரசியலிலும், திரையில் சாதித்தத்தை, நீங்கள் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள். நூறாண்டு நீவிர் வாழ்க... என்று வாழ்த்தியுள்ளார் சிவக்குமார்.


பன்முகக் கலைஞர்


பன்முக கலைஞர் என பாராட்டப்படுபவர் நடிகர் கமலஹாசன். திரைத்துறையில் இதுவரை செய்த சாதனைகள் ஏராளம். திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விக்ரம் படம் வரை அவர் நடித்த படங்களுக்காக 4 தேசிய விருதுகளும், சிறந்த தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகளும், ஆந்திரா அரசின் 4 நந்தி விருதுகளும் ,19 பிலிம்பேர் விருதுகளும், பல இந்திய விருதுகளையும் பெற்று சாதனை படைத்தவர். 


அது மட்டுமல்லாமல் இவருடைய சிறந்த பணிக்காக பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு. 


தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி, மலையாளம், கன்னடம் ,வங்காளம், ஆகிய மொழிகளில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர். அதனால்தான் இவர் உலக நாயகன்!