எம்ஜிஆர் மாதிரியே.. கலை உலகிலும், மக்கள் மத்தியிலும் பேராதரவை பெற்றவர் விஜயகாந்த்.. சிவக்குமார்

Meenakshi
Jan 04, 2024,07:21 PM IST

சென்னை: எம்ஜிஆர்ரைப் போல கலை உலகிலும், மக்கள் உலகிலும்  பேராதரவை பெற்றவர் விஜயகாந்த் என்று நடிகர் சிவக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.


உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி உயிரிழந்தார் தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த். அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  கோயம்பேட்டில் உள்ள மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அவருடனான தனது  நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துள்ளார் நடிகர் சிவக்குமார்.


அவர் கூறியதாவது: எம்ஜிஆர் அவர்களைப் போலவே கலை உலகத்திலும், அரசியல் உலகத்திலும், மக்களுடைய பேராதரவை பெற்றவர் எனது அன்பு சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். இந்த மண்ணுள்ள வரைக்கும் அவரை யாரும் மறக்க முடியாது.  அந்த அளவிற்கு வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர். விதி வசத்தால் நம்மளை விட்டு போயிட்டார்.




கேப்டன் விஜயகாந்த் என்றவுடன் எனக்கு  ஞாபகத்துக்கு வருவது 1996 ஏப்ரல் மாதம் 14ம் தேதி கலைஞர் அவர்களுடைய கலை உலக பொன்விழா என்ற நிகழ்ச்சி. அப்ப அவரு பவர்ல இல்ல. விஜயகாந்த் அவர்கள் நடத்துனது தான் அந்த விழா. யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நடத்தினார். யாரும் அந்த விழாவிற்கு  ஒத்துழைப்பு கொடுக்கல. விஜயகாந்த் அவர்கள் தான் தன் கை காச போட்டு அந்த விழாவை நடத்தினார்.


எத்தனை லட்சம் என்பது தெரியாது. 3.50 லட்சம் பேரு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடே கூடியிருந்தது. இந்த விழாவில் அம்பது ஆயிரம் பேர் சுற்றி நின்று ஆரவாரம் செய்தார்கள்.  இன்னும் கொஞ்ச தூரம் கொண்டு போயிருந்தீங்கன்னா கோட்டைக்கு போயிருவேன்னு சொன்னாரு கலைஞர் அவர்கள். அடுத்த ஒரு மாசத்துல எலக்சன் வந்தது. அதுல முதலமைச்சர் ஆயிட்டாரு. இது தான் அவர் நடத்துன மகத்தான நிகழ்ச்சி. 


அதுக்கப்புறம் நடிகர் சங்க தலைவராயிட்டாரு. லட்சக்கணக்கில் நடிகர் சங்கத்துல கடன் இருந்தது. அதுக்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி கடனை அடைத்தார். பல கலைஞர்கள் திரைத்துறையில் நுழைய கதவை திறந்து விட்டவர். அவர் செஞ்ச தான தர்மத்திற்கு அளவே இல்லை எனலாம். அந்த மனிதன் மீது மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்று அவருக்கு இறுதி மரியாதை செய்ய வந்த கூட்டத்தை வைத்து தான் தெரிந்து கொண்டேன். இந்த மண்ணுள்ள வரைக்கும் அவர் நம்மோடு தான் இருப்பார் என்றார் சிவக்குமார்.


Watch: விஜயகாந்த்துக்கு சிவக்குமார், கார்த்தி அஞ்சலி