சிம்புவின் புதிய அவதாரம்.. 50வது படத்தில் தயாரிப்பாளராக புது வடிவம்.. இயக்கம் தேசிங்கு பெரியசாமி
சென்னை: நடிகர் சிம்புவின் 42வது பிறந்த நாளான இன்று, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது ஐம்பதாவது படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிலம்பரசன் என்கின்ற சிம்பு நடிகர்,பாடகர், டான்சர், இசையமைப்பாளர்,என ஏற்கனவே பன்முகத் திறமைகளைக் கொண்டு தனது பங்களிப்பை தமிழ் சினிமாவிற்கு அளித்து வரும் நிலையில் தற்போது தயாரிப்பாளராக மீண்டும் ஒரு பணியினை தொடங்கி உள்ளார். நடிகர் சிம்பு தனது தந்தையான டி ராஜேந்தர் இயக்கத்தில் 1984ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து அனைவராலும் ஈர்க்கப்பட்டார். இவரின் அழகு, தோற்றம், பேச்சு, என சிறு வயதிலேயே பலரையும் கவர வைத்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயர் சொல்லும் அளவுக்கு பாராட்டை பெற்றார்.
பின்னர் 2002ல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இவருக்கு தமிழக அரசு 2006ஆம் ஆண்டு கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது. இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, காளை, விண்ணைத்தாண்டி வருவாயா, வல்லவன், சிலம்பாட்டம், ஒஸ்தி, போடா போடி, உள்ளிட்ட படங்கள் ஹிட் கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சமீபத்தில் இவர் நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களை திரும்பத் திரும்ப பார்க்க வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதிலும் இப்படத்தில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். இவரை ரசிகர்கள் எஸ் டி ஆர் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இப்படி தமிழ் சினிமா வரலாற்றில் நடிப்பு, பாடல் ஆசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், என பல்வேறு அவதாரங்களை எடுத்து வந்த சிம்பு தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். அதாவது நடிகர் சிம்பு தனது 42வது பிறந்த நாளான இன்று, ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அப்டேட் கொடுத்துள்ளார்.
அதன்படி நடிகர் சிம்பு 50-வது படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்திற்கு எஸ்டிஆர்50 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தேசிங்கு பெரியசாமியின் இயக்குகிறார். மேலும் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும் நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்