அருமையான மனிதர் மாரிமுத்து - ரஜினிகாந்த் இரங்கல்

Su.tha Arivalagan
Sep 08, 2023,05:17 PM IST
சென்னை: நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மிகவும் அருமையான மனிதர் மாரிமுத்து என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்தார்.  இன்று அதிகாலை டப்பிங் பேசும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமும் இருந்தது. இவருடன் நடிகர் கமலேஷ் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். 



டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போதே நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார் மாரிமுத்து. அதனால் தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.  ஆதி குணசேகரன் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தின் மூலம்  தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். நெகட்டிவ் கதாபாத்திரம் மூலம் மிகப் பெரியஅளவில் மக்களை வசீகரித்த ஒரே நடிகர் மாரிமுத்துதான். 

கண்ணும், கண்ணும் மற்றும்  புலிவால் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ளார் .இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். சமீபத்தில்  நடித்த ஜெயிலர் திரைப்படமும் மூலம் அவரின் நடிப்பு பேசப்பட்டது. ஜெய்லர் இவர் வரும் காட்சிகளுக்கும் ரசிகர்கள் ரியாக்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் இரங்கல்

மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.  அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

மாரிமுத்து, இயக்குனர் மணிரத்தினம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியவரிடம் உதவி இயக்குனராக  பணிபுரிந்துள்ளார். பாடகர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்துள்ளார்.  நடிகர்  மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரில்  பேசும் வசனங்கள் மிகவும் டிரெண்டாவும் உள்ளது. அதிலும் குறிப்பாக எம்மா ஏய் என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவி உள்ளது.

சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள்

மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்திற்கு அவரது உடல் இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. அவருடைய இறுதி சடங்குகள் அவர் சொந்த ஊரில் நடப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மாரிமுத்துவின் இறப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து தற்போது ஹைதராபாத்தில் இருப்பதால் அவரது சார்பில் அவரது மகன்கள் மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகிய இருவரும் மாரிமுத்து வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல மாரிமுத்து நடித்த பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜும் இரங்கல் தெரிவித்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சூரி, பிரசன்னா, ராஜேஷ், ரமேஷ் கண்ணா, வையாபுரி, மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.