அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
சென்னை: அண்ணன் ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளதால் என்னால் உதவ முடியாது என்று பிரபு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரராக கொண்டது ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெறப்பட்டிருந்தது.
இந்த கடன் தொகைக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. கடன் தொகையை திருப்பி தராததை முன்னிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். நீதிபதி டி. ரவீந்திரன் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும் படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி, படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையாக முடியவில்லை என கூறப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. பல முறை அவகாசம் கேட்கப்பட்டதால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வீடு, தனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அந்த வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாததால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவரது இளைய மகன் பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். தனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அண்ணனின் 3 கோடி கடனை அடைத்துவிட்டு அந்த பணத்தை அண்ணனிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிரபு தரப்பில், அண்ணன் ராம்குமார் மகன் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவருடைய கடனை நான் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். வாழ்நாளில் இதுவரை நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது கிடையாது. அன்னை இல்லத்தில் அண்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுது்து இந்த வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.